ஷாபாய் கரத் ஒரு வருடமாக கொரோனா வைரஸ்ஸை விரட்டிக் கொண்டிருந்தார். ஒருநாள் வைரஸ் அவரை பிடித்துக் கொண்டது. சமூக சுகாதார செயற்பாட்டாளரான ஷாபாய், அவரது ஊரான சுல்தான்பூரில் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று கோவிட் 19 தொற்று சோதித்துக் கொண்டிருந்தார். மே மாத கடைசி வாரத்தில் அவரது பயம் உண்மையானது. கோவிட் அவரை தொற்றியிருந்தது.
38 வயது ஷாபாய் தொற்றுக்காலத்தில் வேலை செய்வதன் பிரச்சினைகளை அறிந்திருந்தார். ஆனால் அது ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகளை அவர் முன் ஊகித்திருக்கவில்லை. தொற்று உறுதியானவுடன் அவரின் 65 வயது தாய்க்கும் நோய் பரவியது. பிறகு உடன்பிறந்தார் மகன்களுக்கும் பரவியது. மொத்த குடும்பமும் நோயினால் கோபத்தில் இருக்கிறது.
ஷாபாய்க்கு உடல்நிலை சரியாக சில வாரங்கள் ஆயின. “என் உடன்பிறந்தார் மகன்களும் சரியாகி விட்டனர். என் தாயை மட்டும் மருத்துவமனையில் சேர்க்க வேண்டி வந்தது,” என்கிறார் ஷாபாய். ஒரு வாரம் அவர் ஆக்சிஜன் உதவியோடு இருந்தார். “என்னுடைய தாயின் சிகிச்சைக்கு 2.5 லட்ச ரூபாய் ஆனது. என்னுடைய 2.5 ஏக்கர் நிலத்தையும் சில நகைகளையும் நான் விற்றேன்.”
சுகாதார செயற்பாட்டாளர் பணி எப்போதுமே சுலபமாக இருந்ததில்லை. தொற்று இன்னும் அவரின் பணியை மோசமாக்கியது. “என்னை திட்டினார்கள். மிரட்டினார்கள். அறிகுறிகளை தொடக்கத்தில் சொல்லாமல் மறைத்தார்கள்,” என்கிறார் ஷாபாய். “என் வேலையை செய்ய முயன்றபோது என் கிராமத்திலிருந்து எதிர்மறையான எதிர்வினைகள் வந்தன.”
மகாராஷ்டிராவில் 70,000-க்கும் மேற்பட்ட சுகாதார செயற்பாட்டாளர்கள் இருக்கின்றனர். மார்ச் 2020-ல் தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து, அவர்கள்தான் முன்களத்தில் இருக்கின்றனர். வீடுகளுக்கு செல்வது மட்டுமின்றி, கிராமங்களில் நிலவும் தடுப்பூசிக்கான தயக்கத்தையும் அவர்கள்தான் கையாளுகிறார்கள்.












