கடிகாரத்தைப் போல, ஒரு கடுமையான அடிவயிற்று வலி காயத்ரி கச்சராபியை ஒவ்வொரு மாதமும் பீடித்துக் கொள்கிறது. மூன்று நாட்களில் ஏற்படும் வலி மட்டும்தான் அவரின் மாதவிடாய்க் காலத்தை ஞாபகப்படுத்தும் விஷயமாக இருக்கிறது. அவருக்கு மாதவிடாய் வருவது நின்று ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது.
”எனக்கான மாதவிடாயை இப்படிதான் தெரிந்து கொள்கிறேன். ரத்தப்போக்கு இருக்காது,” என்கிறார் காயத்ரி. “மூன்று குழந்தைகள் பெற்றதால் மாதவிடாய்க்கு வெளியேறும் ரத்தம் என்னுள் இல்லாமல் போய்விட்டதோ என்னவோ,” என்கிறார் 28 வயது நிறைந்த அவர். மாதவிடாய் இன்மை, மாதாந்திர வயிற்று வலியையும் முதுகு வலியையும் குறைக்கவில்லை. பிரசவத்தின்போது ஏற்படும் வலியின் அளவுக்கு அந்த வலிகள் இருக்கும் என காயத்ரி சொல்கிறார். “எழக் கூட முடியாது.”
காயத்ரி உயரமாகவும் ஒல்லியாகவும் இருக்கிறார். கூர்மையான பார்வை. விட்டுவிட்டு அழுத்தமாக பேசும் பேச்சு. கர்நாடகாவின் ரானிபென்னூர் தாலுகாவிலுள்ள அசுந்தி கிராமத்தின் எல்லையில் மடிகா என்ற தலித் சமூகத்தினர் வசிக்கும் மடிகரா கெரி பகுதியைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி அவர். கையால் மகரந்தம் சேர்க்கும் வேலையில் திறன் பெற்றவர்.
ஒரு வருடத்துக்கு முன் ஒருமுறை சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்பட்டிருக்கிறது. மருத்துவ ஆலோசனை பெற முடிவெடுத்திருக்கிறார். 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பியாத்கியில் இருக்கும் தனியார் மருத்துவ மையத்துக்கு சென்றார்.
















