“நாங்கள் டெல்லி சென்று வந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. எங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக அரசாங்கம் கூறிய நிலையில், இதுவரை எங்கள் கோரிக்கைகள் குறித்து எங்களிடம் பேச்சுவார்த்தை நிகழ்த்த யாரும் அழைக்கவில்லை,”என்று பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் வசிக்கும் 60 வயதான சரஞ்சித் கவுர் கூறுகிறார். அவர், தன் குடும்பத்தாருடன், தங்களின் இரண்டு ஏக்கர் நிலத்தில் கோதுமை, நெல் மற்றும் வீட்டு உபயோகத்திற்காக சில காய்கறிகளை பயிரிடுபவர். மேலும் கூறுகையில், "நாங்கள் அனைத்து விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் போராடுகிறோம்," என்கிறார்.
சிரஞ்சித், பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள ஷம்பு எல்லையில், தனது அண்டை வீட்டாரும் நண்பருமான குர்மீத் கவுருடன் அமர்ந்துள்ளார். சுட்டெரிக்கும் மதிய வெயிலையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. “அவர்கள் [அரசு] நாங்கள் டெல்லிக்கு செல்வதைத் தடுக்கின்றனர்,” என்கிறார் குர்மீத். ஹரியானா-பஞ்சாப் எல்லைகளிலும், பின்னர் டெல்லி-ஹரியானா எல்லைகளிலும், சாலைகளில் வைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சுவர்கள், இரும்பு ஆணிகள் மற்றும் முள்வேலிகள் ஆகியவற்றைதான் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். மேலும் படிக்க: ‘ஷம்பு எல்லையில் சிறைபட்டதாக உணர்கிறேன்’
சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைத்த குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான (MSP) உத்தரவாதம், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்தல், லக்கிம்பூர்-கேரி படுகொலைக்கான குற்றவாளிகளைக் கைது செய்தல், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் மற்றும் 2020-2021 போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு என பல கோரிக்கைகளுடன் குழுமியிருக்கும் விவசாயிகள், ஒன்றிய அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறுகின்றனர்.
சில வாரங்களுக்கு முன்பு, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தலைநகருக்கு அமைதிப் பேரணியைத் தொடங்கிய விவசாயிகளை, பிப்ரவரி 13 அன்று, கண்ணீர் புகை குண்டு, தண்ணீர் பீரங்கி, பெல்லட் துப்பாக்கிகளின் ரப்பர் தோட்டாக்கள் போன்றவற்றைக் கொண்டு ஹரியானா காவல்துறை தடுத்து நிறுத்தியது.










