வெள்ள எச்சரிக்கை அவரின் வாட்சப் க்ரூப் ஒன்றில் வந்தது. தன்னார்வ தொண்டு நிறுவனம் அனுப்பியிருந்த இந்தி அறிவிப்பில், ராதோ ஆறின் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த செப்டம்பர் மாலையில், 32 வயது கணேஷ் சஃபி வீட்டில் இருந்தார். குடும்பத்தையும் வீட்டின் அத்தியாவசியப் பொருட்களையும் பாதுகாக்க இரண்டு மணி நேரங்கள்தான் இருப்பது அவருக்கு புரிந்தது.
நேபாளத்தின் தெற்கு சமவெளிகளில் இருக்கும் தெராய் என்கிற தாழ்வான பகுதியில் கடும் மழை பொழிந்திருக்கிறது. அங்கிருந்து பிகாரின் சிதாமரி மாவட்ட சுர்சாந்த் ஒன்றியத்தில் கணேஷ் வசிக்கும் சர்காந்தியோ பிதா 220 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
எட்டு மாதங்கள் கழித்து, வெயில் சுட்டெரித்த மே 2025-ன் பிற்பகல் ஒன்றில், மாமர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்த கணேஷ், இரண்டு குழந்தைகளையும் (ஐந்து வயது மகன் மற்றும் மகள்) 28 வயது நகினா தேவியையும் இரண்டு ஆடுகளையும் கோதுமை, பருப்பு, அரிசி சேர்ந்த ஒரு குவிண்டால் உணவுப் பொருட்களையும் பக்கத்து வீட்டுக்காரரின் சிமெண்ட் வீட்டுக்குள் கொண்டு சென்று சேர்த்ததை நினைவுகூர்ந்தார். அவரது குடிசையை போலல்லாமல், பக்கத்து வீட்டுக்காரரின் வீடு, செங்கல் மற்றும் சிமெண்ட் கொண்டு, ஆறு அடி உயர அடித்தளத்தின் மேல், கட்டப்பட்ட வீடு.
மலைப்பாங்கான தெராய் பகுதியில் தொடங்கும் ராதோ ஆறு, கணேஷின் ஊர் வழியாக ஓடுகிறது. மேலே கனமழை பொழிந்தால், இரண்டு மணி நேரங்களில் நீர், சர்காந்தியோ பிதாவுக்கு வந்து விடும்.
பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டில் கணேஷும் அவரது குடும்பமும் சில நாட்களுக்கு தங்கியிருந்தனர். பக்கத்து வீட்டுக்காரர் அவர்களை ஏற்றுக் கொண்டாரா? “ஆம், ஏன் ஏற்றுக்கொள்ள மாட்டார்?” என்கிறார் கணேஷ். “சிரம காலங்களில் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவவில்லை எனில், வேறு யார் உதவுதார்?”
இவற்றுக்கிடையில் அவருடைய குடிசையில், நீர் மூன்றடிக்கு வந்து விட்டது. நீர் வடிந்தபிறகு, வீடு முழுக்க மண் அடர்ந்திருந்தது. எல்லா பொருட்கள், மண் அடுப்பு மற்றும் பாத்திரங்கள் மீதெல்லாம் மண். ஒரு வாரம் முழுக்க வேலை பார்த்து, ரூ.10,000 செலவழித்து மீண்டும் வீட்டை வாழத்தக்கதாக்கினார் கணேஷ். அன்றாடம் 400 ரூபாய் வருமானம் ஈட்டும் நிலமற்ற தொழிலாளரான அவருக்கு அது, பெரிய தொகை.

















