"அன்னை போன்பீபியின் அழைப்பை யாராலும் மறுக்க முடியாது" என்று கூறியபடி ஷம்பா, வானத்தை நோக்கி பக்தியுடன் கைகாட்டினார். "ஜாய் மா போன்பீபி!" அவரும், அவரது கணவர் ரகு குச்சாய், அவர்களது மூன்று வயது மகன் ஆகியோர் தங்கள் கிராமத்தின் தெற்கு முனையில் இருந்த 150 ஆண்டுகள் பழமையான மா போன்பீபி கோயிலை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். அது ஜனவரி மாதத்தின் நண்பகல், மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ராம்ருத்ராபூரில் இந்துக்கள், முஸ்லிம்கள் என யாராக இருந்தாலும், அனைவரும் அங்கு செல்கின்றனர். "மா போன்பீபி காட்டின் ராணி" என்று கிராமத்தின் மூத்த பெண்மணியான ஃபுல் மாஷி (அத்தை) அறிவித்தார். "இன்று காடு இங்கே இல்லாவிட்டாலும், அவளுடைய ஆசீர்வாதங்கள் இங்கே உள்ளன. போன்பீபி ஒரு சக்தி பீடம், இந்த திருவிழா இக்கிராமத்தின் பழமையான பாரம்பரியம்.”
போன்பீபி திருவிழா ஆண்டிற்கு ஒரு முறை ஜனவரி அல்லது ஃபிப்ரவரி மாதங்களில் கொண்டாடப்படுகிறது. ராம்ருத்ராபூரின் மாபெரும் இத்திருவிழா பழமையானது. ரகு தனது அண்ணன் ஷிபுவுடன் சேர்ந்து வைத்துள்ள கடைக்கு என்னை அழைத்துச் சென்றான். கொல்கத்தாவில் ஒரு வியாபாரியிடமிருந்து அவன் வாங்கிய வண்ணமயமான வளையல்கள் மற்றும் பிற ஆபரணங்களால் அந்த கடை நிரம்பி இருந்தது. போன்பீபியின் ஆசீர்வாதங்களைப் பெறுவதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. ஆனால் வருமானத்திற்காக ஆலயத்திற்கு அருகாமையில் தங்கள் கடையை அமைத்துக்கொண்டனர். அங்குதான் பெண்கள் பெருமளவு குழுமி இருந்தனர். கிராமத்தைச் சேர்ந்த சகினா மொண்டல் என்னிடம், "அக்கா, நீங்கள் கோவிலுக்கு போறீங்களா?" என்று புன்னகையுடன் கேட்டார். அவரது மகள் சபீனாவை என்னுடன் கோயிலுக்கு அனுப்பி வைத்தார்.
















