வானவில் ரேவதி அக்காவும் ஓவியர் நடராஜனும் உதவி பண்ணலன்னா என்னோட முதல் புகைப்படக் கண்காட்சி நடந்திருக்காது. 2017ல நடந்த இந்த புகைப்படக் கண்காட்சிதான் என்னை ஒரு புகைப்பட கலைஞனா இந்த உலகத்துக்கு அறிமுகம் செய்தது. நான் PARIல வேலை செய்வது, மேலும் என் வாழ்க்கையில் நடந்த எல்லாத்துக்குமான காரணம் அந்த ஒரு புகைப்பட கண்காட்சிதான். 2004 சுனாமிக்கு பிறகு வானவில் ரேவதி அக்கா, நரிக்குறவர்கள் மற்றும் பூம்பூம் மாட்டுக்காரர்கள் குழந்தைகளுக்காக வானவில் பள்ளி தொடங்கி, இப்ப வரைக்கும் தொடர்ந்து நடத்திட்டு இருக்காங்க. அவர் வழியாதான் நான் ஒன்னாங்காடு மற்றும் துறவிகாட்டின் குழந்தைகளை சந்தித்தேன். அதுக்கப்புறம் அங்க போயி, அந்த மக்களை பார்க்கணும், அவங்க வாழ்வியலை ஒரு கதையா பண்ணணும் அப்டின்னு ஆர்வம் வந்தது.
பூம்பூம் மாட்டுக்காரர் அதியன் என்ற பழங்குடியினர் சமூகத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளனர். மாட்டுக்காரர்கள் பயன்படுத்தும், இரண்டு பக்கங்கள் கொண்டு இடை சுருங்கிய வடிவம் கொண்ட, உருமிகளால் ஏற்படுத்தும் ஒலியையே “பூம்பூம்” என்ற சொல் குறிக்கிறது. அலங்கரித்த காளைகளைக் கொண்டு குறி சொல்லும் அவர்களின் தொழிலை சார்ந்து வந்த பெயர் இது.






























