"ஏ கிசே ஹோர் நு ஜிதா ரஹே நே, சாதே அக்கே கோய் ஹோர் குடி நஹி சி [அவர்கள் வேறு யாரையாவது ஜெயிக்க வைக்கிறார்கள், எங்களுக்கு முன் வேறு பெண்கள் இல்லை]." தடகள வீரர்கள் ஜஸ்பால், ரமதீப் மற்றும் நண்பர்கள் தங்கள் பயிற்சியாளரிடம் ஒரே குரலில் புகார் செய்கிறார்கள். அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த டஜன் கணக்கான இளம் ஓட்டப்பந்தய வீரர்கள் சண்டிகரில் நடந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்க 200 கிலோமீட்டர் பயணம் செய்தனர்.
ஐந்து கிலோமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவது பரிசு வென்றவராக ஜஸ்பால் கவுரின் பெயர் மேடையில் அறிவிக்கப்பட்ட நிலையில் இவை அனைத்தும் நடக்கின்றன. ஜஸ்பால் வெற்றியாளர்தான் என்பது அவர்களுக்குத் தெரியும், ஏனெனில் அவர் இறுதிக் கோட்டை நோக்கி சென்றபோது வேறு யாரும் முன்னணியில் இல்லை. ஆனால் வெற்றியாளருக்கு வழங்கப்படும் ரூ.5,000 ரொக்கப் பரிசு வேறு ஒருவருக்கு அறிவிக்கப்படுகிறது.
ஜஸ்பால் மேடைக்குச் சென்று இரண்டாவது பரிசை ஏற்க மறுக்கிறார், அதற்கு பதிலாக அவரும் அவரது பயிற்சியாளரும் மேடையிலும் வெளியேயும் ஒவ்வொருவரிடமும் சென்று, அமைப்பாளர்களின் முடிவைக் கேள்விக்குள்ளாக்கி, நடந்ததை விவரித்து, நியாயம் கேட்டு உதவியை நாடுகிறார்கள். இறுதியில், பயிற்சியாளரின் வேண்டுகோளுக்கிணங்க ஜஸ்பால் இரண்டாவது பரிசாக ரூ.3,100 என்று எழுதப்பட்ட ஒரு பெரிய ஃபோம் போர்டு காசோலையை ஏற்றுக்கொள்கிறார்.
ஒரு மாதத்திற்குப் பிறகு, 2023 ஏப்ரலில், ஜஸ்பால் ஆச்சரியப்படும் வகையில், அவரது கணக்கில் ரூ.5,000 டெபாசிட் செய்யப்பட்டிருப்பதைக் கண்டார். ஜஸ்பாலுக்கு விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை, எந்த உள்ளூர் செய்தித்தாள்களிலும் செய்தி வரவில்லை. Runizen இணையதளத்தில், 5 கிலோமீட்டர் பந்தயத்திற்கான லீடர்போர்டில் 23.07 நிமிடங்கள் நேரத்துடன் (பந்தய நேரம்) வெற்றியாளராக அவரது பெயர் தோன்றுகிறது. இந்த ஆண்டுக்கான பரிசு விநியோக புகைப்படங்களில் அவர் இல்லை. ஆனால் ஜஸ்பால் இன்னும் பல பதக்கங்கள், மாபெரும் காசோலை பதாகைகளை தன்னிடம் வைத்திருக்கிறார்.
2024 ஆம் ஆண்டில், அடுத்த மராத்தானுக்கு பிற பெண்களுடன் சென்றபோது, இந்த நிருபர் வீடியோ காட்சிகளை ஆராய்ந்து, ஜஸ்பாலை அமைப்பாளர்கள் பந்தயத்தில் தகுதி நீக்கம் செய்ததை கண்டுபிடித்தார். போராடிய மாணவிகளின் கூற்று உண்மை என்பதை அவர்கள் உணர்ந்தனர். ரேஸ் பிப் மூலம் சில மோசடி நடந்துள்ளது. ஜஸ்பாலுக்கு வந்த ரொக்கப் பரிசுத் தொகையின் மர்மம் அதுதான்.
ஜஸ்பாலுக்கு ரொக்கப் பரிசுகள் முக்கியம். அவரால் போதிய பணத்தை சேமிக்க முடிந்தால், மீண்டும் கல்லூரிக்குச் செல்லலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஜஸ்பால் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் இணைய வழியில் பி.ஏ (கலை) படிப்பில் சேர்ந்தார். "ஆனால் என்னால் முதல் செமஸ்டருக்கு மேல் தொடர முடியவில்லை," என்கிறார் அவர். "நான் தேர்வு எழுத ஒவ்வொரு செமஸ்டருக்கும் சுமார் 15,000 ரூபாய் செலுத்த வேண்டும். முதல் செமஸ்டரில் ரொக்கப் பரிசு [கிராமப் பிரதிநிதிகள் மற்றும் தேசிய அளவில் வெற்றி பெறுவதற்காக பள்ளி வழங்கியது] மூலம் கிடைக்கும் பணத்தை கட்டணமாக செலுத்தினேன். ஆனால் அதன் பிறகு என்னிடம் பணம் இல்லாததால் என்னால் அடுத்த செமஸ்டரை தொடர முடியவில்லை."
22 வயதான ஜஸ்பால் தனது குடும்பத்தில் முதல் தலைமுறையாக கல்லூரிக்குச் செல்பவர். பஞ்சாபில் மிகவும் பின்தங்கிய பட்டியல் சமூகமாக வகைப்படுத்தப்பட்டுள்ள மசாபி சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த மிகச் சில பெண்களில் ஒருவர். 47 வயதாகும் ஜஸ்பாலின் தாய் பல்ஜிந்தர் கவுர், ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். ஜஸ்பாலின் மூத்த சகோதரரான 24 வயது அம்ரித்பால் சிங், கோஹாலி கிராமத்தைச் சுற்றியுள்ள கட்டுமானப் பணிகளில் தனது தந்தைக்கு உதவுவதற்காக 12ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டார்; 17 வயதாகும் அவரது தம்பி ஆகாஷ்தீப் சிங், 12ஆம் வகுப்பு முடித்துள்ளார்.


















