ஜோலன் சங்காவின் கைவினை தயாரிப்புகளில் குறைகளைக் கண்டுபிடிக்கவே முடியாது.
அவரது கைகளால் பின்னப்பட்ட சடாய் (பாய்கள்) வடிவங்களில் தொடக்கம், முடிவை அடையாளம் காண்பது கடினம் - சடாயின் நான்கு பக்கங்களும் ஒரே மாதிரியாக இருக்கும். பின்னும் போது சிறு தவறு நிகழ்ந்தாலும், ஒரு மாத உடல் உழைப்பை வீணாக்கிவிடும். எனவே 66 வயதான அவர் கவனமாக இருக்கிறார். அவரது கைகள் இப்போது இந்த வேலைக்கு பழகிவிட்டன. அவர் பிறருடன் உரையாடியபடி கூட நெசவு செய்ய முடியும்.
ஜோலனுக்கும் அவரது மறைந்த கணவர் யாகூப்புக்கும் இரண்டு மகன்கள், நான்கு மகள்கள் இருந்தனர். அவரது மூத்த மகன் 2001-ல் வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர், தொடர்ச்சியான துரதிர்ஷ்டங்களில், யாகூப், அவரது மகள்கள் ரஹில், நில்மணி, மகன் சிலாஸ் ஆகியோர் 2004 மற்றும் 2010க்கு இடைப்பட்ட காலங்களில் காலமானார்கள்.
"என் குடும்பத்தில் நடந்த அனைத்து மரணங்களிலும் நான் நொறுங்கிப் போனேன். என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை," என்கிறார் ஜோலன். "வீட்டை நடத்த எந்த வழியும் இல்லை. எனவே நான் பாய்களைத் பின்னத் தொடங்கினேன்."
ஜார்க்கண்டில் உள்ள சலங்கி கிராமத்தில் மக்கள் தொகை (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011) 1,221 ஆக உள்ளது. சிறுமியாக இருந்ததிலிருந்து 25க்கும் மேற்பட்ட பாய்களை பின்னியுள்ளார். "இந்த வேலை [பின்னல்] பார்ப்பதற்கு கடினமாக இருக்கலாம், ஆனால் கற்றுக்கொள்வது மிகவும் எளிதானது," என்று அவர் கூறுகிறார். அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களை கவனித்து அவர் அதை கற்றுக் கொண்டார். "எனக்கு குழந்தை பருவத்திலிருந்தே இத்திறன் இருந்தது. ஆனால் பண தேவைக்கு மட்டுமே நான் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கினேன்."


















