குத்தாம்பள்ளியின் இளையோர்கள் பலரும் பட்டதாரிகளாக இருப்பதால் நெசவில் ஆர்வமில்லை என்கிறார் மணி. அவரின் மகன் இயந்திர பொறியாளராக இருக்கிறார். திரிசூரிலிருக்கும் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிகிறார். “ஒரு மாதத்துக்கு வெறும் 6000 ரூபாய் ( நெசவிலிருந்து) மட்டும் சம்பாதித்தால், அதை வைத்து என்ன செய்வது?” எனக் கேட்கிறார். “அதனால்தான் இளைஞர்கள் இத்தொழிலில் இல்லை. வெளியூர் வேலைகளுக்கு சென்றுவிட்டனர்.”
சுர்ஜித்தும் ஒரு பொறியாளர்தான். நெசவுத்தொழிலை அவர் கற்றுக் கொள்ளவில்லை. குடும்பத்தின் துணிக்கடையை நிர்வகிக்கிறார். அவரின் தந்தை குத்தம்பள்ளி கைத்தறி தொழில் கூட்டுறவு சங்கத்தின் செயலாளராக இருக்கிறார். தாய் குத்தாம்பள்ளியிலிருந்து நெசவு வேலை செய்கிறார். “இந்த தொழிலில் வேலை பார்க்க இளைஞர்களுக்கு விருப்பமே இல்லை. பிற துறைகளின் நீங்கள் சுதந்திரமாக வேலை பார்த்து சம்பாதிக்க முடியும். ஒரு வாடிக்கையாளர் ஒரு நிறத்துக்கு கேட்டால், நீங்கள் நூலுக்கு நிறம் சேர்க்க வேண்டும். அதற்கு உதவி தேவைப்படும். நெசவு வேலைக்கு நடுவே நூல் உருளை தீர்ந்து போனால், ஒவ்வொரு நூலையும் புதிய் உருளையுடன் சேர்த்திருக்க வேண்டும். இதை செய்யவே ஒரு நாள் பிடிக்கும். நீங்கள் தனியாகவும் செய்துவிட முடியாது. துளை அட்டை உங்களின் வேலைப்பாடுக்கு ஏற்ப ஒருவரால் வடிவமைக்கப்பட வேண்டும். சித்திர நெசவு இயந்திரம் பழுதானால், ஒரு வல்லுநர் வந்து சரி செய்ய வேண்டும். இத்தகைய வேலைகளை நீங்கள் தனியாக செய்ய முடியாது. எல்லாமும் கூட்டுவேலைதான். அதிகமாக இன்னொருவரை சார்ந்திருப்பது மிகவும் கடினமான விஷயம்,” என்கிறார அவர்.
கணவருடன் சேர்ந்து இரு தறிகள் ஓட்டும் ஜெயமணியும் ஒப்புக் கொள்கிறார். “நெசவு வேலையின் பலர் ஈடுபட வேண்டியிருக்கும்,” என்கிறார் அவர். “எங்களின் அண்டை வீட்டுக்காரர்கள் பாவு நூலை பிரித்து சுற்ற உதவுவார்கள். நாங்களும் அவர்களுக்கு உதவுவோம். அத்தகைய கூட்டுழைப்பு இல்லாமல் எங்களால் வேலை செய்ய முடியாது.” ஜெயாவும் அவரின் கணவரும் கைத்தறி சங்கத்துடன் இணைந்தவர்கள். மாதத்துக்கு 18000லிருந்து 25000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள்.
இன்னும் நெசவு வேலையில் ஈடுபடும் சில பெண்களுள் ஜெயாவும் ஒருவர். “பல பெண்கள் இப்போதெல்லாம் துணிக்கடைகளில் வேலை பார்க்கின்றனர். ஏனெனில் அது சுலபமானது. தனியாகவே செய்ய முடியும்.” என்கிறார் அவர். “என்னுடைய குழந்தைகளுக்கு இத்தொழிலில் ஆர்வமில்லை. என்னுடைய மகளுக்கு நெய்ய தெரியும். ஆனால் அவள் நெய்யத் தொடங்கினால் பிற வீட்டு வேலைகளில் கவனம் செலுத்த முடியாது. என்னுடைய மகனுக்கு முற்றிலும் ஆர்வமில்லை. ஒரு கடையில் வேலை பார்க்கிறான். அவனை யார் குற்றம் சொல்ல முடியும்? இது லாபம் தரும் தொழில் இல்லை.”