குஜராத்தின் கேதா மாவட்டத்திலுள்ள தந்தால் கிராமத்தில் வசிக்கும் ரமேஷ் பாய் மனுபாய் படேல் தன் பூர்விக வீட்டுக்கு வெளியே ஒரு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருக்கிறார். வீடு இடியும் நிலையில் இருந்தது. சுவர் பூச்சு உதிர்ந்திருந்தது. நிறம் மங்கிய செங்கற்கள் வெளியில் தெரிந்தன.
முதிய விவசாயி நடுங்கிய விரலால் ஓர் அறையை சுட்டிக் காட்டுகிறார். அந்த அறை அவருக்கு முக்கியமான அறை. அங்குதான் அவர் 82 வருடங்களுக்கு முன் பிறந்தார். ரமேஷ்பாய் அந்த வீட்டுடன் உணர்வால் ஒன்றிப் போயிருந்தார். குறிப்பாக அந்த அறையோடு.
அந்த அறையும் வீடும் சுற்றியுள்ள விவசாய நிலமும் புல்லட் ரயில் திட்டத்துக்காக பறிக்கப்படும் சூழல் இருந்தது. அந்த நிலத்தில்தான் குடும்பத்துக்கு தேவையான நெல்லையும் காய்கறிகளையும் அவர்கள் விளைவிக்கிறார்கள்.
அதிவிரைவு ரயில் 3 மணி நேரத்தில் 508 கிலோமீட்டர்கள் பயணிக்கவல்லது. குஜராத்துக்குள் மட்டும் 350 கிலோமீட்டர் தொலைவு பயணிக்கும். 2 கிலோமிட்டர்கள் தாத்ரா நாகர் ஹவேலியிலும் 155 கிலோமிட்டர்கள் மகாராஷ்ட்ராவிலும் பயணிக்கும் ரயில். மும்பையின் பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மற்றும் அகமதாபாத்தின் சபர்மதி ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு இடையே ரயில் ஓடுமென தேசிய அதிவிரைவு ரயில் இணையதளம் தெரிவிக்கிறது.










