2018ம் ஆண்டு நில உரிமையாளர் ஆனார் கட்டமிடி ராஜேஸ்வரி. “சொந்தமாக நிலம் வைத்திருக்கும் பெண்ணாகப் போகிறேன் என்பதை நினைத்து மகிழ்ந்தேன்.”
கையில் உள்ள நில உரிமைப் பத்திரத்தைப் பார்த்து அவர் அப்படி நினைத்தார்.
எங்கேபள்ளி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து 30 கி.மீ. தொலைவில், பார்வாட் என்ற இடத்தில் அந்த 1.28 ஏக்கர் நிலத்தை ரூ.30 ஆயிரம் கொடுத்து வாங்கியிருந்தார் அவர். ஆனால், ஐந்து ஆண்டுகள் ஆன பிறகும் அந்த நிலம் அவருக்கு உரிமையானது என்பதை அரசாங்கம் இன்னும் அங்கீகரிக்கவில்லை என்கிறார் அவர்.
நிலம் வாங்கி சில மாதங்களிலேயே பட்டாதாரர் பாஸ் புத்தகம் வாங்குவதற்குத் தேவையான, நில உரிமைப் பத்திரம், வில்லங்க சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் அவருக்கு கிடைந்துவிட்டன. ஆனால் “ஐந்து ஆண்டுகள் ஆன பிறகும், பட்டாதாரர் பாஸ்புத்தகம் இன்னும் கிடைக்கவில்லை. பட்டாதாரர் பாஸ்புத்தகம் இல்லாத நிலையில் உண்மையில் இந்த நிலம் என்னுடையதுதானா?”
நிலத்தின் உரிமை மாறிவிட்டது என்பதை பத்திரம் காட்டுகிறது. ஆனால், அந்த உரிமை தொடர்பாக கூடுதல் தகவல்களை பட்டாதாரர் பாஸ்புத்தகம் தரும். பட்டாதாரர் பெயர், சர்வே எண், நில வகை உள்ளிட்ட தகவல்கள் பட்டாதாரர் பாஸ்புத்தகத்தில் இடம்பெறும். நில உரிமையாளரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வட்டாட்சியரின் கையொப்பம் ஆகியவையும் அதில் இருக்கும்.











