அது ஒரு மதியப் பொழுது. கொலாப்பி கொயாரி தயாராகி வீட்டில் காத்திருக்கிறார். உடலை சுற்றி போர்த்தியிருக்கும் போடா சமூகத்தின் பாரம்பரிய மஞ்சள் கோடு போட்ட டோக்கோனா துணியை சரி செய்து கொண்டிருக்கிறார். அப்போது பள்ளி மாணவிகள் எட்டு பேர் அதே வகை டோக்கோனாக்களையும் அரோனாய்களையும் (தோளாடை) அணிந்து வந்து சேருகின்றனர்

“இந்த சிறுமிகளுக்கு நான் போடோ நடனங்களை கற்றுக் கொடுக்கிறேன்,” என்கிறார் போடோ சமூகத்தை சேர்ந்த கொலாப்பி. பக்ஸா மாவட்டத்தின் கோல்காவோன் கிராமத்தில் அவர் வசிக்கிறார்.

பக்ஸா, கொக்ராஜர், உடல்குரி மற்றும் சிராங் மாவட்டங்கள் போடா நிலம் என அழைக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக போடோ நிலப் பிராந்தியம் (BTR) எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த தன்னாட்சிப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக இருக்கும் போடோ மக்கள், அஸ்ஸாமின் பட்டியல் பழங்குடியாக வகைபடுத்தப்பட்டிருக்கிறார்கள். BTR, பூட்டான் மற்றும் அருணாச்சலப் பிரதேச மலைகளின் கீழ் இருக்கும் பிரம்மப்புத்திரா ஆற்றங்கரைகளில் அமைந்திருக்கிறது.

“அவர்கள் உள்ளூர் விழாக்களிலும் நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள்,” என்கிறார் முப்பது வயதுகளில் இருக்கும் கொலாப்பி. பாரியின் நிறுவன ஆசிரியரான பத்திரிகையாளர் பி. சாய்நாத்தை கெளரவிக்கும் வகையில் தன் வீட்டில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார் அவர். உபேந்திர நாத் பிரம்ம அறக்கட்டளையால் (UNBT) நவம்பர் 2022 அன்று 19வது மனிதநேயத்துக்கான ஐநா பிரம்ம சிப்பாய் விருதை பெற்றவர் பி. சாய்நாத்.

போடா சமூகத்தை சேர்ந்த இசைஞர்களும் நடனக் கலைஞர்களும் பங்குபெற்ற காணொளியைக் காணுங்கள்

நிகழ்ச்சிக்காக நடனக் கலைஞர்கள் தயாராகத் தொடங்கியதும் கோபர்தன ஒன்றியத்தை சேர்ந்த உள்ளூர் இசைக் கலைஞர்கள் கொலாப்பியின் வீட்டை தயார் செய்தனர். ஒவ்வொருவரும் கோட் கோஸ்லா மேலாடையை பச்சை மற்றும் மஞ்சள் அரொனாய்களுடன் அணிந்திருந்தனர். இத்தகைய ஆடைகளை பொதுவாக போடோ ஆண்கள், பண்பாடு மற்றும் மத விழாக்களில் அணிந்திருப்பர்.

போடோ விழாக்களில் வாசிக்கப்படும் இசைக்கருவிகளை எடுக்கிறார்கள்: சிஃபங் (நீண்ட புல்லாங்குழல்), காம் (மேளம்), மற்றும் செர்ஜா (வயலின்). ஒவ்வொரு இசைக்கருவியும் அரோனாய்களாலும் பாரம்பரிய “போண்டுராம்” வடிவங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

இசைக் கலைஞர்களில் ஒருவரும் காம் கருவி வாசிப்பவருமான க்ரும்தாவ் பசுமதாரி, கூடியிருக்கும் மக்களிடம் பேசுகிறார். சுபுன்ஸ்ரீ மற்றும் பகுரம்பா நடனங்கள் ஆடவிருப்பதாக சொல்கிறார்.  “பகுரம்பா நடனம் வழக்கமாக விளைச்சலுக்கு பிறகு வசந்த காலத்தில், குறிப்பாக ப்விசாகு விழாவில் ஆடப்படும். திருமண நிகழ்ச்சிகளிலும் ஆடப்படுவதுண்டு.”

ரஞ்சித் பசுமத்தாரி வயலின் வாசிக்கிறார்

நடனக்கலைஞர்கள் மேடையேறியதும் ரஞ்சித் பசுமத்தாரி முன்னே வருகிறார். தனியாக வயலின் வாசித்தபடி ஆடி நிகழ்ச்சியை முடிக்கிறார். வருமானத்துக்காக திருமண நிகழ்ச்சிகளில் நடனமாடுபவர்களில் அவரும் ஒருவர். இவற்றுக்கிடையில் கொலாப்பி சென்று, விருந்தாளிகளுக்கான உணவை சமைக்கிறார்.

சோபாய் ஜ்வின் சமோ (நத்தைகளுடன் உளுந்து, வறுத்த பாங்குன் மீன், ஓன்லா ஜ்விங் தாவ் பெதோர் (உள்ளூர் அரிசியுடனான சிக்கன் குழம்பு), வாழைப்பூ மற்றும் பன்றிக்கறி, சணல் பூக்கள், அரிசியில் செய்யப்படும் மது மற்றும் காந்தாரி மிளகாய் ஆகியவற்றை கொண்டு வந்து மேஜையில் வைக்கிறார். கண்கவரும் நிகழ்ச்சியை கண்ட பிறகு மனம் நிறையும் விருந்தாக அது அமைந்திருந்தது.

தமிழில்: ராஜசங்கீதன்

Himanshu Chutia Saikia

இமான்சு சுட்டியா சைக்கியா, மும்பை, டாட்டா சமூக அறிவியல் கல்விக்கழகத்தின் முதுநிலைப் பட்ட மாணவர். மாணவர் செயற்பாட்டாளரான இவர், இசை தயாரிப்பாளர், ஒளிப்படைக்கலைஞரும் ஆவார்.

Other stories by Himanshu Chutia Saikia
Text Editor : Riya Behl

ரியா பெல் ஒரு பாரியில் பத்திரிகையாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் இருக்கிறார். பாரி கல்வியின் உள்ளடக்க ஆசிரியராக அவர், விளிம்புநிலைச் சமூக மக்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்த மாணவர்களுடன் பணிபுரிகிறார்.

Other stories by Riya Behl
Translator : Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Other stories by Rajasangeethan