தென்கிழக்கு உத்தரபிரதேசத்தின் சித்ரகூட் மாவட்டம் பர்குர்ரா கிராமத்தில் பூரி கல்லு எனும் மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். அவரது வீடு, முற்றம் மற்றும் அடுப்பு முற்றிலும் மண்ணால் கட்டப்பட்டது. விதிவிலக்காக வீட்டில் ஓரிடத்தில் மட்டும் மேற்கூரையின்றி செங்கலில் கட்டப்பட்ட மூன்று சுவர் கொண்ட அறை ஒன்று உள்ளது. அது பாதியில் கைவிடப்பட்ட கழிப்பறை என்பதை பின்னர் அறிய நேர்ந்தது.
அந்த மூதாட்டி தனது வீட்டின் மண் அடுப்பை காட்டுகிறார் – அது உண்மையில் பல துவாரங்களை கொண்ட ஒரு குழியைப் போன்று காணப்படுகிறது. இதுவே அவரது முதன்மை வருவாய் ஆதாரம். அவர் பழைய சாக்குகளை வெட்டி பல அடுக்குகளாக செய்து அடுப்பை மூடியுள்ளார். "நான் இங்கு கொண்டைக்கடலை, கோதுமை போன்றவற்றை வறுக்கிறேன். ஆனால் இது திருமண காலத்தில் மட்டுமே அதிகம் செய்யப்படும்.
அரசிடம் இருந்து எனக்கு ஆண்டுதோறும் 1,800 ரூபாய் ஓய்வூதியமாக கிடைக்கிறது. அதை வைத்து நான் சமாளித்துக் கொள்கிறேன்" என்கிறார்.
நான் அவரிடம் சொந்தமாக அல்லது குத்தகைக்கு எடுத்த விவசாய நிலம் ஏதும் உள்ளதா என்று கேட்டேன். அவர் தலையசைக்கிறார். "என்னிடம் இண்டு பிகா நிலம் இருந்துச்சு. ஆனால் இப்போது இல்லை. என் குழந்தையின் மருத்துவ செலவிற்காக அதை விற்றுவிட்டேன்." அவரது மகன் ஹரியானாவின் சோனிபட்டில் இப்போது பணிபுரிகிறார். அவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.




