“1970கள் மற்றும் 80களில், எங்களுக்கு அதிக மீன்கள் கிடைத்தன. தென்னந்தோப்புகளுக்கு உரமாகக் கூட கானாங்கெளுத்தியை விற்றிருக்கிறோம்” என்று வடக்கு கோவாவில் உள்ள கலங்குட் கிராமத்தைச் சேர்ந்த மார்சலின் பெர்னாண்டஸ் என்ற வயதான மீனவர் என்னிடம் கூறினார். (இந்த ஆவணப்படத்திற்காக நான் அவரைச் சந்தித்த காலத்துக்குப் பிறகு அவர் இறந்துவிட்டார்).
பல தசாப்தங்களைக் கடந்து, கோவா மிகவும் பிரபலமான இடமாக மாறி, ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தபோதிலும் வருடத்தின் எல்லா மாதங்களிலும் மீன்களுக்கான தேவை இருந்துகொண்டே இருந்தது. எனினும் மீன்கள் அதிகளவில் இல்லை. கோவா கடற்கரையில் மீன்பிடிக்கும் பெரிய விசைப்படகுகளும் மீனவர்களின் மீன்பிடி அளவைக் குறைத்துள்ளன.
இதன் விளைவாக, மாநிலத்தின் 104 கிலோ மீட்டர் கடற்கரையோரத்தில் வாழும் சமூகங்கள், பாரம்பரிய மீன்பிடித் தொழிலுக்கு உதவுவதற்காக கடைகள், நீர் விளையாட்டுகள் மற்றும் பிற சுற்றுலா தொடர்பான வேலைகளைத் தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காலப்போக்கில், இளையத் தலைமுறையைச் சேர்ந்த பலர் மேற்கு ஆசிய நாடுகளுக்கு வேலைக்காகச் சென்றனர். பலர் சிறியக் கடற்கரை உணவகங்களை அமைத்தனர் அல்லது வேறு வழிகளில் சுற்றுலாத் துறையின் ஒரு பகுதியாக மாறினர்.
சிலர் இன்னும் மீன்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்: "எனது முன்னோர்கள் மீனவர்கள், நானும் அவர்களுள் ஒருவனாகத் தொடர்ந்து இருப்பேன்" என ரோனி பெர்னாண்டஸ் கூறுகிறார்.
Shifting Sands ஆவணப்படத்தில் வடக்கு கோவாவின் சுற்றுலாப் பகுதியின் மையத்தில் உள்ள கலங்குட் கிராமத்தின் மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இதில், அவர்கள் தங்களைத் தாங்களே எப்படி உணர்ந்துகொள்கிறார்கள், அவர்களின் வர்த்தகம் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள மாற்றங்களை எவ்வாறு உணர்கிறார்கள் போன்றவை உள்ளட்டகமாகி இருக்கிறது.
மணல்கள் மாறியிருக்கலாம். அலைகள் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் சில பிணைப்புகள் வலிமையானதாக இருக்கும்.


