"எனது இரு கைகளிலும் ஒரு பானாவுடன் (ஸ்பேனருடன்) நான் இறப்பேன்", என்று சம்சுதீன் முல்லா கூறுகிறார். "மரணமே எனது ஓய்வாக இருக்கும்!"
இது சற்று நாடகத்தனமாக தோன்றலாம், ஆனால் சம்சுதீன் உண்மையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்பேனர் மற்றும் பிற கருவிகளை பயன்படுத்தி தனது வாழ்நாளின் பெரும் பகுதியைக் கழித்துவிட்டார். இக்கருவிகளை பயன்படுத்தி எல்லா வகையான இயந்திரங்களையும் - தண்ணீர் பம்பு, போர்வெல் பம்பு, சிறிய அகழ்வாயும் கருவி, டீசல் இயந்திரம் மற்றும் பலவற்றை பழுது நீக்குகிறார்.
இதுபோல, பழுதான அல்லது ஓரங்கட்டப்பட்ட விவசாயக் கருவிகளை மீண்டும் உயிர்பித்துக் கொண்டு வருவதில் அவருக்கு உள்ள நிபுணத்துவத்துக்கு கர்நாடகாவின் பெல்காம் மாவட்டம் மற்றும் மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்திலுள்ள கிராமங்களில் அதிக தேவை உள்ளது. "மக்கள் என்னைத் தான் அழைப்பார்கள்", என்று அவர் ஒருவித பெருமிதத்துடன் கூறுகிறார்.
விவசாயிகளும் மற்றும் பிற வாடிக்கையாளர்களும் இயந்திரத்தில் உள்ள பழுதைக் கண்டறிய அவர் பயன்படுத்தும் தனிப்பட்ட நுட்பத்தின் காரணமாக சம்சுதீனைத் தேடி வருகிறார்கள். "நான் ஆப்பரேட்டரை கைப்பிடியை மட்டுமே சுழற்ற சொல்வேன், அதிலிருந்து இயந்திரத்தில் என்ன பழுது இருக்கிறது என்பதை என்னால் கண்டறிய முடியும்," என்று அவர் விளக்குகிறார்.
அதன் பின்னரே உண்மையான வேலை துவங்குகிறது. ஒரு பழுதான இயந்திரத்தை சரி செய்ய அவருக்கு எட்டு மணி நேரம் ஆகிறது. "இதில் இயந்திரத்தை திறந்து அதை மறுசீரமைப்பதற்கான நேரத்தையும் அது உள்ளடக்கியுள்ளது" என்று சம்சுதீன் கூறுகிறார். "இன்று, (இயந்திர) உபகரணங்கள் அனைத்தும் அதை சரி செய்வதற்கான ஆயத்த கருவிகளுடனே வருகின்றன, எனவே அவற்றை சரி செய்வது மிக எளிதாகிவிட்டது" என்று அவர் கூறுகிறார்.
ஆனால், அவரது எண்ணற்ற மணிநேரப் பயிற்சியே அவரது இந்த எட்டு மணி நேர சராசரியை அடைய அவருக்கு உதவியுள்ளது. தற்போது 83 வயதாகும் சம்சுதீன், தான் கடந்த 73 வருடங்களில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இயந்திரங்களை பழுது நீக்கம் செய்திருப்பேன் என்று தோராயமாக மதிப்பிடுகிறார்- ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க உதவும் இயந்திரம், கடலை மற்றும் எண்ணெய் விதைகளில் இருந்து எண்ணெயை பிரித்தெடுக்கும் இயந்திரம், கட்டுமான இடங்கள் மற்றும் கிணறுகளில் கற்களை நகர்த்த பயன்படுத்தும் இயந்திரம் மற்றும் பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்களையும் அவர் பழுது நீக்கம் செய்துள்ளார்.







