வடக்கு கொல்கத்தாவின் குமார்துலி பகுதியின் குறுகிய பாதை, கையால் இழுக்கப்படும் ரிக்ஷா கடந்து செல்லும் அளவுக்கு அகலமாக இருப்பினும், அந்தப் பகுதியில் நீங்கள் வழக்கமாக சந்திக்கும் ஒரே நபர்கள் குமார்கள் எனப்படும் நகரத்திலுள்ள சிலைத் தயாரிப்பாளர்களாகவே இருப்பார்கள். இந்தப் பகுதியில் செய்யப்படும் துர்கை மற்றும் பிற தெய்வங்களின் சிலைகள் தான் ஒவ்வொரு ஆண்டும் வழிபாட்டிற்காக கொல்கத்தாவிற்குள் செல்கின்றன..
கார்த்திக் பால் என்பவர் இந்தப்பகுதியில் ஒரு பட்டறை வைத்துள்ளார். அது உண்மையில் மூங்கில் மற்றும் நெகிழித் தாள்களால் ஆன ஒரு கொட்டகை மட்டுமேயேயாகும். அது 'பிரஜேஷ்வர் அண்ட் சன்ஸ்' (அவரது தந்தையின் பெயர்) என்று அழைக்கப்படுகிறது. அவர் ஒரு சிலையை உருவாக்கும் நீண்ட மற்றும் பல்வேறு செயல்முறைகள் குறித்து கூறினார். இதற்காக கங்கா மதி (நதியின் கரையில் உள்ள சேறு) மற்றும் பாத் மதி (சணல் துகள்கள் மற்றும் கங்கா மதி ஆகியவற்றின் கலவை) போன்ற பல்வேறு மண் கலவைகள் சிலை செய்யும் வெவ்வேறு கட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன..
![Karthik Paul at his workshop in Kumartuli](/media/images/02_Journey_through_Kumartuli_Sinchita_Maji.max-1400x1120.jpg)
குமார்துலி பகுதியில் உள்ள அவரது பட்டறையில் கார்த்திக் பால்
நாங்கள் இதுகுறித்து பேசிக்கொண்டிருந்த போது, ஈரமான களிமண்ணைக் கொண்டு கார்த்திகைக் கடவுளின் முகத்தை பால் அவரது அனுபவம் வாய்ந்த கைகளால் மெருகேற்றிக் கொண்டிருந்தார். அதற்காக வர்ணமடிக்கப் பயன்படும் தூரிகை மற்றும் சியாரி எனப்படும் மூங்கிலால் செய்யப்பட்ட கையால் மெருகூட்டப்பட்ட சிற்பக் கருவியினை அவர் பயன்படுத்தினார்.
அதன் அருகிலுள்ள மற்றொரு பட்டறையில், கைவினைக்கலைஞர் கோபால் பால், களிமண் சிலையில் தோல் போன்ற தோற்றத்தை உண்டாக்குவதற்காக ஒரு மெல்லிய துண்டு போன்ற பொருளை ஒட்டுவதற்கு பசை தயார் செய்துகொண்டிருந்தார். கொல்கத்தாவில் இருந்து வடக்கே 120 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாடியா மாவட்டத்தின் கிருஷ்ணாநகரைச் சேர்ந்தவர் கோபால். இங்குள்ள தொழிலாளர்களில் பலர் – குறிப்பாக எல்லா ஆண்களும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே; அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பட்டறை உரிமையாளர்களால் வழங்கப்பட்ட அந்தப் பகுதியிலேயே வசித்து வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் அதிக வேலை இருக்கும் சீசனிற்கு சில மாதங்களுக்கு முன்னரே பணியமர்த்தப்படுகிறார்கள். அவர்கள் எட்டு மணி நேர பணிமுறையில் வேலை செய்கின்றனர். எனினும், இந்த கைவினைஞர்கள் இலையுதிர்கால திருவிழாவிற்கு முன்னர் இரவு முழுவதும் கூடுதலாக பணி செய்து அதற்கான ஊதியத்தையும் பெற்று வருகின்றனர்.
குமார்துலி பகுதியில் முதன்முதலாக பணி செய்த குயவர்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணாநகரில் இருந்து இங்கு இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் ஆற்றின் கரைகளில் இருந்து களிமண்ணை எளிதாக எடுக்க முடியும் என்பதன் காரணமாக பாக்பஜார் காட் அருகே புதிதாக உருவாக்கப்பட்டிருந்த குமார்துலி பகுதியில் சில மாதங்கள் தங்கியுள்ளனர். மேலும் இவர்கள் ஜமீன்தார்களின் வீடுகளில் உள்ள தகுர்தாலான் பகுதிகளுக்காக (ஜமீன்தார்களின் குடியிருப்பு வளாகத்திற்குள் மத விழாக்களுக்காக வரையறுக்கப்பட்ட பகுதிகள்) துர்கா பூஜை விழாவிற்கு சில வாரங்களுக்கு முன்பாக சிலைகளை செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.
![The artisans prepare a clay called ‘path mati’ by mixing jute particles with ‘atel mati’ from the Ganga](/media/images/03_Journey_through_Kumartuli_Sinchita_Maji.max-1400x1120.jpg)
கைவினைஞர்கள் சணல் துகள்களை கங்கையிலிருந்து வரும் களிமண்னான ‘அடெல் மதி’யுடன் கலந்து ‘பாத் மதி’ என்ற களிமண்ணைத் தயாரிக்கிறார்கள்
![](/media/images/04_Journey_through_Kumartuli_Sinchita_Maji.max-1400x1120.jpg)
![Once the bamboo structure is ready, straw is methodically bound together to give shape to an idol; the raw materials for this come from the nearby Bagbazar market](/media/images/05_Journey_through_Kumartuli_Sinchita_Maji.max-1400x1120.jpg)
இடது: சிலையை உருவாக்கும் செயல்முறை ' கதமோ ' என்ற சிலைக்கு ஆதரவளிக்கும் மூங்கில் அமைப்பு முறையிலிருந்து தொடங்குகிறது. வலது: இந்த மூங்கில் அமைப்பு தயாரானதும் , சிலைக்கு வடிவம் கொடுக்க வைக்கோல் முறைப்படி ஒன்றாக இணைக்கப்படுகிறது ; இதற்கான மூலப்பொருட்கள் அருகிலுள்ள பாக்பஜார் சந்தையில் இருந்து வருகின்றன
![An artisan applies sticky black clay on the straw structure to give the idol its final shape; the clay structure is then put out in the sun to dry for 3 to 4 days](/media/images/06_Journey_through_Kumartuli_Sinchita_Maji.max-1400x1120.jpg)
ஒரு கைவினைக் கலைஞர் சிலையோன்றுக்கு அதன் இறுதி வடிவத்தைக் கொடுப்பதற்காக வைக்கோல் அமைப்பின் மீது கருப்பு களிமண்ணைப் பூசுகிறார் . பின்னர் , இந்த களிமண் அமைப்பு உலர்த்தப்படுவதற்காக 3 முதல் 4 நாட்களுக்கு வெயிலில் வைக்கப்படுகிறது
![](/media/images/07_Journey_through_Kumartuli_Sinchita_Maji.max-1400x1120.jpg)
சிலையை மெருகூட்டுவதற்காக வர்ணத் தூரிகை மற்றும் மூங்கிலால் ஆன சிற்பக்கருவி போன்றவைப் பயன்படுத்தப்படுகிறது
![At another workshop nearby, Gopal Paul uses a fine towel-like material to give idols a skin-textured look](/media/images/08_Journey_through_Kumartuli_Sinchita_Maji.max-1400x1120.jpg)
அண்மையிலுள்ள மற்றொரு பட்டறையில் , கோபால் பவுல் சிலைகளுக்கு தோல் போன்ற தோற்றத்தைக் கொடுக்க ஒரு மெல்லிய துண்டு போன்ற பொருளைப் பயன்படுத்துகிறார்
![With the painting of Maa Durga’s eyes on the auspicious day of Mahalaya, the clay idols are finally brought to life](/media/images/09_Journey_through_Kumartuli_Sinchita_Maji.max-1400x1120.jpg)
மஹாளய நன்னாளில் கடவுள் துர்க்கையின் கண்கள் வரையப்படுவதுடன் , களிமண் சிலைகள் இறுதியாக உயிர்ப்பிக்கப்படுகின்றன
காண்க: ‘குமார்துலியின் வழியே ஒரு பயணம்’ Photo album
கடந்த 2015-16 ஆம் ஆண்டு பி.எ.ஆர்.அய் (PARI) யின் பெல்லோஷிப்பின் ஒரு பகுதியாக சிஞ்சிதா மாஜியினால் இந்தக் கட்டுரையும், காணொளியும் மேற்கொள்ளப்பட்டது.
தமிழில்: பிரதீப் இளங்கோவன்.