முன்பொரு காலத்தில் கேதரின் கவுர், போதி முர்மு மற்றும் முகமது துளசிராம் என மூன்று அண்டைவீட்டார் இருந்தனர். கேத்தி ஒரு விவசாயி. போதி, சணல் ஆலையில் வேலை பார்த்தார். முகமது, மாடு மேய்க்கும் வேலை செய்தார். நகரத்தில் பலரும் பெருமை பொங்க பேசிக் கொண்டிருந்த அரசியல் சாசனம் என்கிற கனமான புத்தகத்தை கொண்டு என்ன செய்வதென அவர்களில் எவருக்கும் தெரியவில்லை. அதில் பயனில்லை என்றார் கேத்தி. ஒருவேளை அது புனிதமாக இருக்கலாம் என நினைத்தார் போதி. “அது நம் குழந்தைகளுக்கு சாப்பாடு போடுமா?” என்று கூட முகமது கேட்டார்.

தாடி வைத்த அரசன் தேர்ந்தெடுக்கப்பட்டதை கூட மூவரும் கவனிக்கவில்லை, “அவ்வளவு நேரம் யாருக்கு இருக்கிறது?” பிறகு மழை பொய்த்தது. கடன்கள் அதிகரித்தன. தன் பெயரை முணுமுணுத்த பூச்சிக்கொல்லி மருந்தை கேதரின் கண்டறிந்தார். சணல் ஆலை திவாலானது. போராடிய தொழிலாளர்கள் மீது காவல்துறை கண்ணீர் குண்டு வீசியது. போராட்டத்துக்கு தலைமை தாங்கிய போதி முர்மு மீது தீவிரவாத வழக்குகள் போடப்பட்டன. இறுதியாக முகமது துளசிராமுக்கான நேரம் வந்தது. ஒரு மங்களகரமான மாலையில் அவரது பசுக்கள் வீட்டுக்கு வந்தன. பின்னாடியே கத்திகளுடன் இரண்டு கால் கன்றுகள் வந்தன. “கோமாதா வாழ்க! கோமாதா வாழ்க!”

அசுரத்தனமான கோஷத்துக்கு நடுவே எங்கோ சில பக்கங்கள் படபடத்தன. நீல சூரியன் உதித்தது. தயக்கத்துடன் ஒரு முணுமுணுப்பு கேட்டது:
“இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை…

ஹைக்கூக்களை ஜோஷுவா போதிநெத்ரா வாசிப்பதை கேளுங்கள்



அரசியல் சாசன புலம்பல்

1.
நம் நிலம் இறையாண்மை கொண்டது
அதே போல்தான் மேகத்துள் சிவப்புத் துருவாக
சிக்கவைக்க்கப்பட்டிருக்கும் நம் தாகமும்.

2.
சோசலிச ஒருங்கிணைவை
ஏன் கனவு காண வேண்டும்? வெயிலில்
நம் தொழிலாளர்கள் அலறும்போது.

3.
கோவில், மசூதி, தேவாலயம்
மற்றும் ஒரு மசூதி - மதச்சார்பற்ற
கருவில் சூல் கொண்டிருந்த சூலாயுதம்

4.
ஜனநாயகமே !
வாக்குக்காக நம் பண்டிதர்கள் எழுதினார்கள்
‘மரணமும் கடனே’ என்று.

5.
குடியரசாக இருந்த நிலத்தில்
அரசனுக்கு பட்டாபிஷேகம், புத்தர்கள் விழுகிறார்கள்
துப்பாக்கி முனை ஈட்டிகள் பாடுகின்றன.

6.
நீதி தேவதையின்
கண்கட்டுக்குக் கீழ் கண்கள் இல்லை,
இனி என்றும் இருக்காது

7.
விவசாயத்துக்கான சுதந்திரம்
பேரங்காடியில் விற்கப்படுகிறது
அடைக்கப்பட்ட பூச்சிக்கொல்லி குடுவைகளில்

8.
புனிதப் பசுக்களையும்
கரிய இறைச்சி துண்டுகளையும்தான்
நம் உணவாக சமத்துவக்காரன் சமைக்கிறான்

9.
சூத்திரர்கள் பெருமூச்சுவிட
பிராமணனின் குரைப்பு சத்தத்தை
சகோதரத்துவம் கேட்கிறது


இக்கவிதையை எழுதத் தூண்டிய தீவிரமான உரையாடல்களுக்காக கவிஞர், ஸ்மிதா காடோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறார்

தமிழில் : ராஜசங்கீதன்

Joshua Bodhinetra

ஜோஷுவா போதிநெத்ரா கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு இலக்கிய ஆய்வுப்படிப்பு முடித்திருக்கிறார். பாரியில் மொழிபெயர்ப்பாளராக இருக்கும் அவர், ஒரு கவிஞரும் கலை எழுத்தாளரும் கலை விமர்சகரும் சமூக செயற்பாட்டாளரும் ஆவார்.

Other stories by Joshua Bodhinetra
Illustration : Labani Jangi

லபானி ஜங்கி 2020ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுயாதீன ஓவியர். தொழிலாளர் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்துக் கொண்டிருப்பவர்.

Other stories by Labani Jangi
Translator : Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Other stories by Rajasangeethan