“இது என்னுடைய கருவி அல்ல,” என்கிறார் மனைவி பாபுடி போபியுடன் சில கணங்களுக்கு முன் உருவாக்கி முடித்த ராவணகதா கருவியை கிஷன் போபா தூக்கி காண்பித்து.

“ஆம். நான் வாசிப்பேன். எனினும் இது என்னுடையதல்ல,” என்கிறார் கிஷன். “இது ராஜஸ்தானின் பெருமை.”

ராவணகதா என்பது மூங்கிலால் செய்யப்படும் ஒரு கம்பி வாத்தியம். பல தலைமுறைகளாக கிஷனின் குடும்பம் அதை உருவாக்கியும் வாசித்தும் வருகின்றனர். அக்கருவியின் தொடக்கத்தை அவர் ராமாயண காப்பியத்துடன் தொடர்புபடுத்துகிறார். ராவணகதா என்கிற பெயர் இலங்கையின் அரசன் ராவணனின் பெயரில் உருவானது என்கிறார். வரலாற்றாய்வாளர்களும் எழுத்தாளர்களும் இதை ஒப்புக் கொள்கின்றனர். கடவுள் சிவனை வேண்டி ஆசி பெறுவதற்காக ராவணன் இக்கருவியை உருவாக்கியதாகக் கூறுகின்றனர்.

2008ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட Ravanhattha: Epic Journey of an Instrument in Rajasthan என்ற புத்தகத்தை எழுதிய டாக்டர் சுனீரா கஸ்லிவால் சொல்கையில், “கம்பி வாத்தியங்களிலேயே பழமையானது ராவணகதாதான்,” என்கிறார். அதை வாசிக்கும் விதம் வயலினை போல் இருப்பதால், பல அறிஞர்கள் அந்த கருவியை வயலினுக்கும் செல்லோவுக்கும் முன்னோடி எனக் கருதுவதாக கூறுகிறார்.

கிஷனுக்கும் பாபுடிக்கும் இக்கருவியை உருவாக்குவதென்பது அவர்களின் அன்றாட வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கிறது. உதய்ப்பூர் மாவட்டத்தின் கிர்வா தாலுகாவின் பர்காவ் கிராமத்திலுள்ள அவரது வீட்டை சுற்றி ராவணகதா செய்ய தேவையான மரக்கட்டைகளும் தேங்காய் கூடுகளும் ஆட்டுத்தோலும் கம்பிகளும் கிடக்கின்றன. அவர்கள் நாயக் சமூகத்தை சேர்ந்தவர்கள். ராஜஸ்தானில் அச்சமூகமும் பட்டியல் சாதி ஆகும்.

40 வயதுகளில் இருக்கும் தம்பதி, உதய்ப்பூரின் பிரபல சுற்றுலாத்தலமான கங்கார் காட்டில் வேலைக்கு செல்ல, காலை 9 மணிக்கு கிராமத்திலிருந்து கிளம்புகின்றனர். பாபுடி ஆபரணங்கள் விற்கிறார். அருகே அமர்ந்து ராவணகதா வாசித்து கிஷன் வாடிக்கையாளர்களை ஈர்க்கிறார். இரவு 7 மணிக்கு அவர்கள் எல்லாவற்றையும் மூட்டை கட்டி ஐந்து குழந்தைகள் இருக்கும் வீட்டுக்கு திரும்புகின்றனர்.

இப்படத்தில் கிஷனும் பாபுடியும் ராவணகதாவை எப்படி செய்வது என்பதையும் அவர்களின் வாழ்க்கையை இக்கருவி எப்படி வடிவமைக்கிறது என்பதையும் காண்பித்து இக்கலை சந்திக்கும் சவால்களையும் விவரிக்கின்றனர்.

காணொளி: ராவணனை காப்பாற்றுதல்

தமிழில் : ராஜசங்கீதன்

உர்ஜா, பாரியின் மூத்த உதவி காணொளி தொகுப்பாளர். ஆவணப்பட இயக்குநரான அவர் கைவினையையும் வாழ்க்கைகளையும் சூழலையும் ஆவணப்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார். பாரியின் சமூக ஊடகக் குழுவிலும் இயங்குகிறார்.

Other stories by Urja
Text Editor : Riya Behl

ரியா பெல் ஒரு பாரியில் பத்திரிகையாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் இருக்கிறார். பாரி கல்வியின் உள்ளடக்க ஆசிரியராக அவர், விளிம்புநிலைச் சமூக மக்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்த மாணவர்களுடன் பணிபுரிகிறார்.

Other stories by Riya Behl
Translator : Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Other stories by Rajasangeethan