“லேசான கோபத்தை வெளிப்படுத்த புருவங்கள் சற்று உயர்த்தப்பட வேண்டும். கடும்கோபம் எனில் கண்கள் பெரிதாகவும் மேலே சென்ற புருவங்களும் வேண்டும். சந்தோஷத்துக்கு கன்னங்கள் புன்னகையால் உப்ப வேண்டும்.”
இத்தகைய நுட்பங்கள் மீது கவனம் செலுத்துவதால்தான், ஜார்க்கண்டின் சராய்கெலா சாவ் நடனங்களில் பயன்படும் முகமூடிகளை செய்வதில் வல்லுநராக திகழ்கிறார் திலீப் பட்நாயக். “முகமூடி கதாபாத்திரத்தின் தன்மையை பிரதிபலிக்க வேண்டும்,” என்கிறார் அவர். “சராய்கெலா முகமூடிகள் தனித்துவமானவை. ஏனெனில் அவை நவரசங்களை கொண்டிருக்கும். பிற சாவ் பாணியில் இது இருக்காது.”
வெவ்வேறு கட்டங்களில் இருக்கும் முகமூடிகள் அவரின் பட்டறையில் கிடக்கிறது. விரிந்த கண்கள், மெல்லிய புருவங்கள், வெளிர் தோல் நிறங்கள் போன்றவை பல உணர்வுநிலைகளை வெளிப்படுத்துகின்றன.
இக்கலைவடிவம் நடனத்தையும் தற்காப்பு கலையையும் கலக்கிறது. ராமாயணம், மகாபாரதம் மற்றும் உள்ளூர் கதைகளை நடிக்கும் நடனக்கலைஞர்கள் இந்த முகமூடிகளை அணிகின்றனர். திலீப் எல்லா முகமூடிகளையும் செய்கிறார். ஆனால் அவருக்கு பிடித்தது கிருஷ்ணனின் முகமூடிதான். ஏனெனில், “பெரிய கண்களையும் உயர்த்திய புருவங்களையும் கொண்டு கோபத்தை காட்டுவது எளிது. ஆனால் குறுமை அத்தனை எளிதாக காட்டிட முடியாது.”
திலீப்பும் நிகழ்த்துக் கலைஞராக இருப்பதும் உதவியாக இருக்கிறது. ஒரு குழந்தையாக அவர் சாவ் நடனக்குழுவில் இருந்தார். உள்ளூர் சிவன் கோவிலில் சாவ் விழாவில் நிகழ்ச்சியை பார்த்தே பெரும்பாலும் கற்றுக் கொண்டார். அவருக்கு பிடித்த பகுதி, கிருஷ்ண நடனம்தான். இன்று அவர் மேளம் வாசிக்கிறார். சராய்கெலா சாவ் குழுவின் அங்கத்தினராக இருக்கிறார்.










