முப்பது வருடங்களுக்கு முன்பு, மூங்கிலை வைத்து எப்படி வேலை செய்வது என்பதை, இளம் சஞ்சய் காம்ப்ளேவுக்கு கற்பிக்க யாரும் விரும்பவில்லை. இன்று, அவர் தனது கலையை காக்க அனைவருக்கும் கற்பிக்க விரும்பும் போது, கற்றுக்கொள்ள யாரும் விரும்பவில்லை. "காலம் எப்படி மாறிவிட்டது என்பது அதிசயமாக இருக்கிறது," என்று 50 வயதான அவர் கூறுகிறார்.
மேற்கு மகாராஷ்டிரா பகுதியில் நெல் விவசாயிகள் பயன்படுத்தும் ஒரு வகையான ரெயின்கோட்டான இர்லாக்கள் காம்ப்ளேவின் கைவண்ணம். இவற்றை அவர், தனது ஒரு ஏக்கர் நிலத்தில் வளரும் மூங்கிலைக் கொண்டு செய்கிறார். "சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் ஷாஹுவாடி தாலுகாவில் நிறைய மழை பெய்ததால், ஒவ்வொரு விவசாயியும் வயல்களில் வேலை செய்யும் போது, இர்லாவைப் பயன்படுத்தினர்," என்று கெர்லே கிராமத்தில் வசிக்கும் இவர் கூறுகிறார். தனது பண்ணையில் வேலை செய்யும் போது தானும் ஒன்றை அணிவதாக கூறுகிறார். இந்த மூங்கில் ரெயின்கோட், குறைந்தது ஏழு ஆண்டுகள் வரை நீடிக்கும். அதுமட்டுமில்லாமல், "அதற்குப் பிறகும், அதை எளிதாக சரிசெய்ய முடியும்," என்று அவர் கூறுகிறார்.
ஆனால் எல்லாம் மாறிவிட்டது.
கடந்த 20 ஆண்டுகளில் கோலாப்பூர் மாவட்டத்தில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மழைப்பொழிவு - 1,308 மிமீ (2003) முதல் 973 (2023) வரை குறைந்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.
"குறையும் மழைப்பொழிவு, என் கலையைக் கொன்றுவிடும் என்று யாருக்குத் தெரியும்?" என்று இர்லா செய்யும் சஞ்சய் காம்ப்ளே கேட்கிறார்.
"எங்கள் விவசாயம், மழையை நம்பியிருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரை மட்டுமே நாங்கள் விவசாயம் செய்கிறோம்," என்கிறார் காம்ப்ளே. பல ஆண்டுகளாக, மழையின் மாறுபாடுகளால் பெரும்பாலான கிராமவாசிகள் மும்பை மற்றும் புனே போன்ற நகரங்களுக்கு குடிபெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அங்கு அவர்கள் உணவகங்களிலும், தனியார் பேருந்து நிறுவனங்களில் நடத்துனர்களாகவும், கொத்தனார்களாகவும், தினசரி கூலித் தொழிலாளர்களாகவும், தெரு வியாபாரிகளாகவும் இருக்கின்றனர். அல்லது மகாராஷ்டிர வயல்களில் உழைக்கிறார்கள்.


















