“ஒரு சிறிய பிழை நேர்ந்தாலும், கோய்தாவிற்கு பதில் உங்களுக்கு சத்தூர் தான் கிடைக்கும்!” இறைச்சி வெட்டும் கத்திக்கும், அரிவாளுக்குமான வித்தியாசத்தை அறிந்தவர் ராஜேஷ் சாபேகர். ஒரு தேர்ந்த லோஹராக (கொல்லர்), அவர் மஹாராஷ்டிராவின் அக்தன் கிராமத்தில் உள்ள தனது பட்டறையில், இதுவரை 10,000-க்கும் மேலான கருவிகளை வடிவமைத்துள்ளார்.
52 வயதான இவர், இந்த வேலையை தனது தந்தை தத்தாத்ரேய சாபேகரிடம் இருந்து கற்றுக் கொண்டார். பாஞ்சால் கொல்லர் வம்சா வழியில் வரும் இவர்கள், மஹாராஷ்டிர விவசாயிகளின் நம்பிக்கை பெற்றவர்கள் ஆவர். “‘அக்தன் சே ஹி ஹத்யார் லேகே ஆவோ’ [அக்தனிலிருந்து மட்டுமே கருவிகளைக் கொண்டு வா] என மக்கள் கூறுவர்,” என நெகிழ்கிறார் இந்த வசாய் தாலூகாவின் ஏழாம் தலைமுறை கொல்லர். இவரால் 25 வகையான விதிவிதமான விவசாயக் கருவிகளை உருவாக்க முடியும்.
சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில், நாவி மும்பையில் இருக்கும் உரனிலிருந்தும், தஸ்னி கருவிக்காக மொத்தமாக ஆர்டர் கொடுக்க வாடிக்கையாளர்கள் வருகின்றனர். இந்த கருவி படகுகள் செய்வதற்கு மிக முக்கியமானது ஆகும். “கிர்ஹைக்ஸ் [வாடிக்கையளர்கள்] நான்கு நாட்கள் ஆனாலும், எங்கள் வீட்டில் தங்கி இருந்து, ஆரம்பத்தில் இருந்து நாங்கள் அந்த கருவியை செய்வதை பார்த்து வாங்கி செல்வர்,” என நினைவுகூருகிறார்.
அக்தன் கிரமத்தின் குறுகிய சாலைகள், சாதி அடிப்படையில் வரையறுக்கப்பட்ட எல்லைகளாகின்றன. இங்கு சோனர் (பொற்கொல்லர்), லோஹர்(கொல்லர்), சுத்தார்(ஆச்சாரி), சம்பார்(செருப்புத் தொழிலாளி), கும்பார்(குயவர்) வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும், கைவினைஞர்களின் கடவுளான, விஷ்வகர்மாவின் பக்தர்களாக தங்களை கருதுகின்றனர். 2008 முதல், நாடோடி பழங்குடியினரின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பாஞ்சால் லோஹர்கள், அதற்கு முன் வரை OBC (பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) ஆக வகைப்படுத்தப்பட்டிருந்தனர்.
19 வயதில், தனது குடும்பத் தொழிலான கொல்லர் தொழிலுக்கு செல்லும் எண்ணம் தனக்கு இல்லை என்று ராஜேஷ் கூறுகிறார். அதுமட்டுமில்லாமல், அவர் பணிபுரிந்த மின் சாதனக் கடையில் மாதம் ரூ.1,200 சம்பளம் கிடைத்தாகவும் கூறுகிறார் ராஜேஷ். தங்களது பெரிய கூட்டுக் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவால், வேலையை இழந்த தந்தைக்கு பின், குடும்பத்தின் மூத்த மகனான தான் இந்த வேலையை தொடரும் கட்டாயத்திற்கு ஆளானதாக கூறுகிறார்.
























