அஞ்சான் கிராமத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் ஒரு புனிதக் குன்றில் புள்ளிகளாக வெள்ளை மற்றும் காவிக் கொடிகள். இயற்கை வழிபாடான சர்ணா நெறியை பின்பற்றும் ஓராவோன் போன்ற பழங்குடி சமூகங்கள் வைத்தவை வெள்ளைக் கொடிகள். ஜார்க்கண்டின் கும்லா மாவட்ட மலையுச்சியில் 1985ம் ஆண்டு அனுமன் கோவிலை கட்டிய இந்துக்கள் வைத்தவை காவிக்கொடிகள். இந்துக் கடவுளின் பிறப்பிடம் அது என அவர்கள் கூறுகின்றனர்.
மூங்கில் கதவில் இருக்கும் இரண்டு பெரிய பேனர்களில் இரண்டு கமிட்டிகளின் பெயர்கள் இருந்தன. வனத்துறையுடன் இணைந்து நடத்தப்படும் கும்லா வன பிரபந்தன் மண்டல் மற்றும் அஞ்சானின் மக்கள் (ஒன்றாக சன்யுக்த் கிராம வன பிரபந்தன் சமிதி என அழைக்கப்படுகிறது) இப்பகுதியின் புனித யாத்திரைகளை 2016ம் ஆண்டிலிருந்து மேற்பார்வையிட்டு வருகிறது. இந்துக்களால் 2019ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட அஞ்சன் தம் மந்திர் விகாஸ் சமிதி, இங்கிருக்கும் கோவிலை பார்த்துக் கொள்கிறது.
நுழைவாயிலைக் கடந்ததும் இரண்டு படிக்கட்டுகள் எதிர்ப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழிபாட்டு பகுதிக்கு செல்கிறது. ஒன்று மலையுச்சியில் இருக்கும் அனுமன் கோவிலுக்கு செல்கிறது. இன்னொன்று இந்து கோவில் வருவதற்கு முன்னிருந்து பழங்குடி பஹான்கள் வழிபடும் இரண்டு குகைகளுக்கு செல்கிறது.
இரு வேறு குழுக்கள் இயக்கும் இரு வேறு கடவுளருக்கான நன்கொடை உண்டியல் அவரவரின் வழிபாட்டு இடத்துக்கருகே இருக்கிறது. ஒன்று குகையருகேயும் ஒன்று கோவிலருகேயும். மூன்றாவதாக ஒன்று முற்றத்தில் இருக்கிறது. அது, பஜ்ரங்தளத்துக்கு சொந்தமானது. இந்த உண்டியலின் நிதி, துறவிகளுக்கான விருந்துக்கான செவ்வாய்க்கிழமை பந்தாராவுக்கு பயன்படுத்தப்படுகிறது. இன்னொன்றும் மலையடிவாரத்தில் கிராமத்துக்கருகே இருக்கிறது. பழங்குடியினர் பூஜை செய்யவும் பூஜைக்கான பொருட்கள் வாங்கவும் அது உதவுகிறது.
“இது முழுக்க பழங்குடி பகுதி. அஞ்சானில் முன்பு புரோகிதர்கள் இருந்ததில்லை.” முன்னாள் ஊர்த்தலைவரான 42 வயது ராஞ்செய் ஒராவோன், விந்தையான வழிபாட்டு முறைகளை பார்த்து நான் ஆர்வத்துடன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கிறார். “சமீபத்தில்தான் பனாரஸிலிருந்து புரோகிதர்கள் இங்கு வந்திருக்கின்றனர். ஒராவோன் பழங்குடியினர், பல வருடங்களாக அஞ்சானி தெய்வத்தை வழிபட்டு வருகின்றனர். அவர் அனுமனுக்கு சொந்தக்காரர் என்பது எங்களுக்கு தெரியாது,” என்கிறார் அவர்.
“புரோகிதர்கள் வந்தார்கள். அனுமனின் தாய்தான் அஞ்சானி என்கிற கருத்தை பிரபலப்படுத்தினார்கள்,” என்கிறார் ராஞ்செய். “பிறகு அஞ்சான், அனுமனின் பிறப்பிடமாக அறிவிக்கப்பட்டது. யாருக்கும் எதுவும் புரிவதற்கு முன்பே, மலையுச்சியில் அனுமன் கோவிலும் முளைத்துவிட்டது. அதற்கு பெயர் அஞ்சன் தம் என்றும் சூட்டப்பட்டுவிட்டது.










