7 வயது கஜ்ரி, மூன்று வயது மாமா மகனுடன் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவிலுள்ள வாடகை வீட்டுக்கு பின் விளையாடிக் கொண்டிருந்த போது இரண்டு பேரால் கடத்தப்பட்டார்.
பத்து வருடங்கள் கழித்து டிசம்பர் 2020-ல் இன்னொரு மாமா மகன் - வங்கி முகவர் - நகரத்திலுள்ள ஒரு வீட்டுக்கு சென்றபோது கஜ்ரி போன்ற தோற்றம் கொண்ட ஒரு பெண், தரையைத் துடைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார். தந்தையின் பெயரைக் கேட்டார். அதற்குள் அந்த உரையாடலை ஒரு பெண் இடைமறித்து பேச விடாமல் செய்தார். அவர் சென்று, வன்முறையிலிருந்து பெண்களையும் சிறுமிகளையும் காக்கவென பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு அமைச்சகம் அமைத்திருந்த One-Stop மையத்துக்கு தகவல் கொடுத்தார். சில மணி நேரங்களிலேயே ஒரு காவலர் படை வந்து வீட்டில் சோதனை நடத்தி, கஜ்ரியை மீட்டு, குடும்பத்திடம் ஒப்படைத்தது.
இப்போது 21 வயது கஜ்ரி மனநல பாதிப்புடன் வாழ்கிறார். முன்னாலுள்ள கீழ் வரிசை பற்கள் அவருக்கு இல்லை. கடந்த 10 வருட வாழ்க்கையை பற்றி மிக மங்கலான நினைவுகளே அவருக்கு இருக்கின்றன. கடத்தல், பாலியல் வன்கொடுமை, குழந்தை தொழிலாளர் பணி ஆகியவற்றினூடாக வாழ்ந்து வந்திருக்கிறார்.











