"மிர்ச்சி மே ஆக் லக் கயி [மிளகாய் எரிகிறது]."
டிசம்பர் 2, 1984 அன்று இரவு, போபாலில் வசிக்கும் நுஸ்ரத் ஜஹான் உறங்கிக் கொண்டிருக்கும் போது மூச்சுவிட முடியாமல் கண் விழித்தார். கண் எரிச்சலுடன், கண்ணீர் வழிந்தது. சிறிது நேரத்தில் அவரது ஆறு வயது மகனும் அழ ஆரம்பித்தான். அழுகை சத்தம், அவரது கணவர் முகமது ஷஃபீக்கையும் எழ வைத்தது.
"கயாமத் கா மன்சர் தா" [பார்க்க பேரழிவு போன்று இருந்தது]," என்று தற்போது 70 வயதாகும் ஷஃபீக் கூறுகிறார். நவாப் காலனியில் உள்ள தனது வீட்டில் அமர்ந்து, போபால் வாயு பேரழிவு (BGD) நிகழ்வுகளை நினைவுகூருகிறார். மத்தியப் பிரதேசத்தின் தலைநகரில் இந்த நிகழ்வு நடந்து இன்றோடு 40 ஆண்டுகள் ஆகிறது.
காகித ஆலை ஒன்றில் தினசரி கூலித் தொழிலாளியாக பணியாற்றும் ஷஃபீக், நச்சு வாயுக்களின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட தனது குடும்பத்தின் சிகிச்சைக்காக, அடுத்த சில வருடங்களை அவநம்பிக்கையுடன் செலவிட வேண்டியிருந்தது. இதைத் தாண்டி, 18 வருடங்களாக அவர்கள் பயன்படுத்திய, அவர்களின் நீர் தேவைக்கு ஒரே ஆதாரமாக இருந்த, நச்சுக் கலந்த கிணற்று நீரும், இவர்களின் நிலையை இன்னும் மோசமாக்கி இருந்தது. அந்த நீர் அவரது கண்களுக்கு எரிச்சலூட்டியது. ஆனால் அவர்களுக்கு வேறு நீர் ஆதாரம் இல்லை என்று அவர் கூறுகிறார். 2012 ஆம் ஆண்டில் தான் சம்பவ்னா டிரஸ்ட் கிளினிக் தண்ணீரைச் சோதித்து, அதில் உள்ள நச்சுக் கூறுகளைக் கண்டறிந்தது. இதையடுத்து மாநில அரசு, அப்பகுதியில் உள்ள அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் மூடியது.
1984 ஆம் ஆண்டு இரவு, ஷஃபீக்கின் வீட்டில் அசௌகரியத்தை ஏற்படுத்திய நச்சு வாயு, அப்போது பன்னாட்டு யூனியன் கார்பைடு கார்ப்பரேஷனுக்கு (UCC) சொந்தமான யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் (UCIL) தொழிற்சாலையில் இருந்து வெளியேறி இருந்தது. டிசம்பர் 2 ஆம் தேதி இரவு கசிவு ஏற்பட்டது - UCIL தொழிற்சாலையில் இருந்து கசிந்த அதிக நச்சுத்தன்மை வாய்ந்த மெத்தில் ஐசோசயனேட்டின், உலகின் மிக மோசமான தொழில்துறை பேரழிவாகக் கருதப்படுகிறது.











