ஆகஸ்ட் 24, 2024 அன்று, மாசுபட்ட தண்ணீரால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது அரசு காட்டும் அக்கறையின்மையை எதிர்த்து, பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான மக்கள், லூதியானாவில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'காலே பானி டா மோர்ச்சா' (தண்ணீர் மாசுபாட்டிற்கு எதிரான போராட்டம்) என்ற வாசகம் ஏந்தி நடந்த இந்த போராட்டத்தில் சட்லஜ் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர்.
‘புத்த தரியாவை [நதி] விட்டுவிடுங்கள்! சட்லஜை விட்டு விடுங்கள்.’
புத்த நாலாவில் மாசுபட்டிற்கு எதிரான இந்த போராட்டமும் புதிதல்ல, அதை சுத்தம் செய்வதற்கான திட்டங்களும் புதிதல்ல. சுமார் முப்பது வருடங்களாக நடந்து வரும் இந்த போரட்டங்களால் எந்த பலனும் இல்லை. முதல் திட்டமான, சுத்தமான நதி சட்லஜ் செயல் திட்டம் - 1996ல் தொடங்கப்பட்டது; ஜமால்பூர், பட்டியான் மற்றும் பல்லோக் கிராமங்களில் மூன்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (STPs) அமைக்கப்பட்டன.
2020ல், பஞ்சாப் அரசாங்கம், புத்த நாலாவிற்கு ரூ.650 கோடி மதிப்பிலான இரண்டாண்டு புத்துயிர் திட்டத்தை அமைத்தது. முதல்வர் பகவந்த் மான், முந்தைய அரசாங்கத்தை குற்றம் சாட்டி, ஜமால்பூரில் உள்ள மாநிலத்தின் மிகப்பெரிய எஸ்டிபி மற்றும் புத்த நாலாவை புத்துயிர் பெற வைப்பதற்காக ரூ.315 கோடி மதிப்பிலான பிற திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
ஒருவருக்கொருவர் பழி சொல்வார்களே தவிர, பிரச்சினையை தீர்க்க அரசாங்கமோ அரசியல் கட்சிகளோ எதுவும் செய்யவில்லை என்கிறார் காஷ்மீரா பாய். லூதியானாவில் உள்ள ஆர்வலர்கள் பஞ்சாப் அரசாங்கத்தின் பார்வைக்கு இந்த பிரச்சினையை மீண்டும் மீண்டும் கொண்டு வருகிறார்கள். ஆனால் கோடிகளை செலவழித்த பிறகும், நாலா மாசுபடுவதால், மக்கள் அவ்வப்போது போராட்டங்களில் இறங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
60 வயதான மல்கீத் கவுர், மான்சா மாவட்டத்தில் உள்ள அகமத்பூரில் இருந்து போராட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ளார். “அசுத்தமான நீரும், தொழிற்சாலைக் கழிவுகளுமே, நம்மைப் தாக்கும் பல நோய்களுக்குக் காரணம். தண்ணீர் என்பது வாழ்க்கையின் அடிப்படைத் தேவை. எங்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைக்க வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.