“வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் பருத்தியின் நிறமும் எடையும் போய்க் கொண்டிருக்கிறது. நிறம் மங்கினால், விலை குறையும்,” என்கிறார் சந்தீப் யாதவ் கவலையுடன். மத்தியப் பிரதேசத்தின் கோகாவோன் தாலுகாவின் பருத்தி விவசாயியான அவர், அதற்கான விலை உயர அறுவடை முடிந்த அக்டோபர் 2022-லிருந்து காத்திருக்கிறார்.
மத்தியப்பிரதேசத்தின் பருத்தி தயாரிக்கும் மாவட்டங்களுள் பெரிய மாவட்டமான கர்கோனேவில் 2.15 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் பருத்தி விளைவிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் பயிர் நடப்பட்டு, அக்டோபர் தொடங்கி டிசம்பர் இரண்டாம் வாரம் வரை அறுவடை செய்யப்படும். எட்டு மாதங்களில் (அக்டோபரிலிருந்து மே வரை) கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய்க்கான பருத்தி கார்கோனேவின் பருத்தி மண்டியிலிருந்து தினந்தோறும் வாங்கப்படுகிறது. சந்தீப், மத்தியப்பிரதேச பேராம்புரா கிராமத்திலுள்ள தனது 18 ஏக்கர் விவசாய நிலத்தில் 10 ஏக்கருக்கு பருத்தி விளைவிக்கிறார்.
அக்டோபர் 2022-ன் அறுவடையில் கிடைத்த 30 குவிண்டால் பருத்தி சந்தீப்புக்கு சந்தோஷத்தை கொடுத்தது. அவருடைய நிலத்தில் முதல் அறுவடைப் பருவம் அது. இரண்டாம் முறை அதே அளவு கிடைக்கும் என நினைத்தார். 26 குவிண்டால் கிடைத்தது.
சில நாட்கள் கழித்து, கர்கோனே பருத்தி மண்டியில் 30 குவிண்டால்களை சந்தீப்பால் விற்க முடியவில்லை. மத்தியப்பிரதேசத்தின் எல்லா பருத்தி மண்டிகளும் வணிகர் போராட்டத்தால் அக்டோபர் 11, 2022லிருந்து மூடப்பட்டிருந்தன. விற்கப்படும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் மண்டி வரியாக இருந்த ரூ.1.70-ஐ குறைக்க வேண்டுமென வணிகர்கள் போராடினர். நாட்டிலேயே அதிகமான மண்டி வரி அது. எட்டு நாட்களுக்கு போராட்டம் தொடர்ந்தது.
போராட்டத்துக்கு ஒரு நாளைக்கு முன் (அக்டோபர் 10) ஒரு குவிண்டாலின் விலை ரூ.8,749 ஆக கர்கோனே பருத்தி மண்டியில் இருந்தது. போராட்டம் முடிந்த பிறகு விலை 890 ரூபாய் வரை சரிந்து ரூ.7,850 ஆக மாறியது. அக்டோபர் 19, 2022-ல் மண்டிகள் மீண்டும் திறக்கப்பட்டபோது, விலை சரிந்ததால் அவர் தன் விளைச்சலை விற்கவில்லை. “பயிரை இப்போது விற்றால், எனக்கு லாபம் கிடைக்காது,” என்கிறார் 34 வயது விவசாயி பாரியுடன் அக்டோபர் 2022-ல் பேசியபோது








