"கொல்கத்தா, ஜெய்ப்பூர், டெல்லி அல்லது பம்பாய் எதுவாக இருந்தாலும், மூங்கில் போலோ பந்துகள் நேரடியாக தியோல்பூரிலிருந்து சென்றன" என்று இந்தியாவில் போலோ விளையாட்டு விளையாடப்பட்ட இடங்களைப் பட்டியலிடுகிறார் ரஞ்சித் மால்.
மேற்கு வங்கத்தின் தியோல்பூரைச் சேர்ந்த போலோ பந்து கைவினைஞரான 71 வயது ரஞ்சித், சுமார் 40 ஆண்டுகளாக குவாடுவா மூங்கிலின் கிழங்குகளில் இருந்து பந்துகளை செதுக்கி வருகிறார். உள்நாட்டில் பான்ஸ்-எர் கோர்ஹா என்று அழைக்கப்படும் கிழங்குகள் மூங்கில் தாவரத்தின் நிலத்தடி பகுதியை உருவாக்குகின்றன, இது அவை வளரவும் பரவவும் உதவுகிறது. அவர் அந்த கைவினைத் தொழிலின் கடைசி சிற்பி (கைவினைஞர்) ஆவார். அந்தத் திறமை காலாவதி ஆகி விட்டதென அவர் சுட்டிக்காட்டுகிறார்
ஆனால், 160 ஆண்டுகளுக்கும் மேலாக நவீன போலோ விளையாடப்படுகிறது - தொடக்கத்தில் இராணுவம், அரச குடும்பத்தினர், செல்வந்தர்களின் க்ளப்களில் விளையாடப்பட்டன. இதற்கு மூங்கில் பந்துகள் தியோல்பூரிலிருந்து வந்தன. சொல்லப் போனால், உலகின் முதல் போலோ க்ளப் 1859-ம் ஆண்டில் அசாமின் சில்சாரில் நிறுவப்பட்டது; இரண்டாவது 1863-ல் கல்கத்தாவில் கட்டப்பட்டது. நவீன போலோ என்பது சாகோல் காங்ஜேயின் தழுவல் பதிப்பாகும் (மணிப்பூரில் மெய்த்தெய் சமூகத்தின் பாரம்பரிய விளையாட்டு), மேலும் மூங்கில் கிழங்கு பந்துகளை விளையாட பயன்படுத்தியவர்கள் மெய்த்தெய்கள்.
1940களின் முற்பகுதியில், தியோல்பூர் கிராமத்தில் ஆறு முதல் ஏழு குடும்பங்கள் 125க்கும் மேற்பட்ட கைவினைஞர்களை வேலைக்கு அமர்த்தியது, அவர்கள் கூட்டாக ஆண்டுக்கு ஒரு லட்சம் போலோ பந்துகளை தயாரித்தனர். "எங்கள் திறமையான சிற்பக்காரர்கள் போலோ சந்தையை அறிந்திருந்தனர்", என்று ரஞ்சித் கூறுகிறார். அவரது கூற்றுகளுக்கு ஹவுரா மாவட்டத்தின் பிரிட்டிஷ் கால கணக்கெடுப்பு மற்றும் குடியேற்ற அறிக்கை சான்று தருகிறது: "இந்தியாவில் போலோ பந்துகள் தயாரிக்கப்படும் ஒரே இடம் தியோல்பூர் என்று தெரிகிறது."
ரஞ்சித்தின் மனைவி மினோத்தி மால் கூறுகையில், "போலோ பந்துகள் தயாரிக்கும் தொழில் வளர்வதைப் பார்த்து, எனது தந்தை எனக்கு 14 வயதாக இருக்கும்போது இங்கு திருமணம் செய்து வைத்தார்" என்று கூறுகிறார். அவருக்கு இப்போது அறுபது வயதாகிறது, ஒரு தசாப்தத்திற்கு முன்பு வரை, அவர் தனது கணவருக்கு கைவினையில் உதவி வந்தார். இந்த குடும்பம் மேற்கு வங்கத்தில் பட்டியல் சாதியாக பட்டியலிடப்பட்ட மால் சமூகத்தைச் சேர்ந்தது; ரஞ்சித் தனது வாழ்நாள் முழுவதும் தியோல்பூரில் கழித்துள்ளார்.
தனது வீட்டில் உள்ள மதூர் புல், பாயில் அமர்ந்து பழைய செய்தித்தாள் துணுக்குகள் மற்றும் பத்திரிகை கட்டுரைகளின் பொக்கிஷமான தொகுப்பை அவர் படித்துக் கொண்டிருக்கிறார். "இந்த உலகில் எங்காவது லுங்கி அணிந்து போலோ பந்துகளை உருவாக்கும் ஒரு நபரின் புகைப்படத்தை நீங்கள் கண்டால், அது என்னுடையதாக இருக்கும்" என்று அவர் பெருமிதத்துடன் கூறுகிறார்.














