பன்னா மாவட்டத்தில் ஆகஸ்ட் தொடங்கி மழை பெய்து வருகிறது. கைதாபாரோ அணை கொள்ளளவை எட்டி விட்டது. இது அருகிலுள்ள பன்னா புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ள மலைகளில் இருந்து ஓடுகிறது.
சுரேன் பழங்குடி ஒரு சுத்தியலுடன் அணைக்கு வருகிறார். வேகமாக ஓடும் நீரை கவனமாக பார்க்கிறார். புதிய கற்களோ, உடைந்த பாகங்களோ ஓட்டத்தை தடுக்கிறதா என பார்க்கிறார். சுத்தியலை வைத்து கற்களை சற்று ஒதுக்கி நீர் ஓடுவதற்கான நல்ல வழியை ஏற்படுத்திக் கொடுக்கிறார்.
“நீர் சரியாக ஓடுகிறதா என பார்க்க நான் வந்திருக்கிறேன்,” என்கிறார் அவர். “ஆமாம், சரியாக ஓடுகிறது,” எனத் தலையசைக்கிறார் பில்புரா கிராமத்தை சேர்ந்த சிறு விவசாயி. சில மீட்டர் தூரத்தில் இருக்கும் தன் நிலத்தின் நெற்பயிர் வாடாது என நிம்மதி கொள்கிறார்.
சிறு அணையை முழுமையாக பார்க்கும் அவர், “இது பெரிய ஆசிர்வாதம். நெல்லும் வளரும், கோதுமையும் வளரும். இதற்கு முன் நீர்ப்பாசனம் செய்ய முடியவில்லை. எனக்குள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் பார்க்க முடியாதிருந்தது,” என்கிறார்.
பில்புரா மக்களின் ஆசிர்வாதம்தான், இந்த அணை கட்ட உதவ வைத்து, ஆதாயத்தை விளைவித்திருக்கிறது.
தோராயமாக ஆயிரக்கணக்கான மக்கள் வாழும் பில்புராவில் பெரும்பாலும் கோண்ட் பழங்குடி விவசாயிகள் வசிக்கின்றனர். ஒவ்வொருவரிடமும் சில கால்நடைகள் இருக்கின்றன. இந்த கிராமத்தில் அடிகுழாயும் கிணறும் மட்டும்தான் இருந்ததாக 2011ம் ஆண்டு கணக்கெடுப்பு பதிவு செய்திருக்கிறது. மாநில அரசு மாவட்டத்துக்கு உள்ளும் வெளியேயும் குளங்களை கட்டியிருக்கிறது. ஆனால் நீர்ப்பிடிப்பு பகுதி இல்லை என்னும் உள்ளூர்வாசிகள், “நீர் நிற்பதில்லை,” என்கின்றனர்.








