“குலாம் நபி, உன் கண்ணு கெட்டுப் போயிடும். நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்குற? போய் தூங்கு!”
இரவு நீண்ட நேரமாகியும் நான் மரத்தை செதுக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் என் அம்மா இப்படித்தான் சொல்வார். அவர் திட்டுவதைக் கேட்ட பின்பும் நான் என் வேலையை நிறுத்துவது அரிது. 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் கைவினையை செய்துதான் இன்று நான் இருக்கும் நிலையை அடைந்துள்ளேன். என் பெயர் குலாம் நபி தார். காஷ்மீரின் ஸ்ரீநகர் மாநகரைச் சேர்ந்த மரச் சிற்பி நான்.
நான் எப்போது பிறந்தேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால், எனக்கு 70 வயதுக்கு மேல் ஆகிறது. இந்த நகரின் மாலிக் சாஹிப் சஃபகடல் பகுதியில்தான் வாழ்நாள் முழுவதும் வசித்திருக்கிறேன். அருகே இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் படிக்கத் தொடங்கி, மூன்றாம் வகுப்பு படிக்கும்போது குடும்பத்தின் பொருளாதார நிலைமை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டேன். என் தந்தை அலி முகமது தார், அருகில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் வேலை செய்து வந்தார். எனக்கு 10 வயது ஆகும்போதுதான் அவர் ஸ்ரீநகருக்குத் திரும்பி வந்தார்.
நகரில் காய்கறி, புகையிலை விற்று அவர் எங்களைக் காப்பாற்றினார். அப்போது குடும்பத்தில் என் தாய் அசி மற்றும் 12 குழந்தைகள் இருந்தோம். மூத்த மகன் என்ற முறையில் நானும், என்னுடன் பிறந்த பஷீர் அகமது தாரும் தந்தைக்கு உதவி செய்தோம். செய்வதற்குப் பெரிதாக வேலை இல்லாத காலத்தில் நாங்கள் சுற்றித் திரிவோம். இது குறித்து எங்கள் தாய் மாமா ஒரு முறை எங்கள் தந்தையிடம் புகார் கூறியதோடு, நாங்கள் மரச்சிற்ப வேலை செய்யவேண்டும் என்றும் யோசனை கூறினார்.














