சரஸ்வதி பாவுரி துயரத்தில் இருந்தார்.
சாபூஜ் சாதி சைக்கிள் திருடு போனதிலிருந்து, பள்ளிக்கு செல்வது அவருக்கு சவாலாகி விட்டது. அரசு பள்ளிகளுக்கு 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் செல்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தின் காரணமாக அந்த சைக்கிள் கிடைத்த தினத்தை கூட சரஸ்வதி நினைவில் வைத்திருக்கிறார். ஓ! சூரிய வெளிச்சத்தில் எப்படி பளபளத்தது!
இன்று அவர் ஊர்த்தலைவரிடம் புது சைக்கிள் பெறுவதற்கான மனுவை கொடுக்க நம்பிக்கையோடு வந்திருக்கிறார். “உனக்கு சைக்கிள் கெடச்சாலும் கெடைக்கும். ஆனா ஸ்கூல் இங்க இருக்குமான்னு தெரியல,” என்கிறார் ஊர்த் தலைவர் லேசான புன்சிரிப்போடு. காலடியில் இருந்த பூமி நழுவுவதை போல் இருந்தது சரஸ்வதிக்கு. என்ன சொல்கிறார் ஊர்த் தலைவர்? பள்ளிக்கு செல்ல ஏற்கனவே அவர் ஐந்து கிலோமீட்டர் சைக்கிள் மிதித்து செல்கிறார். அது அதிகரித்து 10, 20 கிலோமீட்டரானால், அவருக்கு பிரச்சினைதான். வருடந்தோறும் கன்யாஸ்ரீ திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் ஆயிரம் ரூபாய் கொண்டு சமாளிக்க முடியாது. அவரது தந்தை அவரை மணம் முடித்துக் கொடுத்து விடுவார்.
சைக்கிள்
சிறுமியே சிறுமியே பள்ளிக்கு
அரசாங்க சைக்கிளில் உறுதியான
இரும்பு ஏர் போல் செல்பவளே…
முதலாளிகளுக்கு நிலம் வேண்டுமாம்
பள்ளிக்கூடங்கள் இல்லாது போனால் என்னவாவது?
சிறுமியே சிறுமியே ஏன் கோபம் கொள்கிறாய்?


