“ஆவோ ஆவோ அப்னா பவிஷ்யாவனி, சுனோ அப்னி ஆகே கி கஹானி…” அவரின் குரல் மந்திர உச்சாடனம் போல, ஜுஹு கடற்கரையில் மாலை நேர நெரிசலில் கேட்கிறது. சூரியன் அஸ்தமிக்கும் பின்னணியில் 27 வயது உதய் குமார், மக்களை வரும்படி அழைத்துக் கொண்டிருக்கிறார்.
அவர் ஒரு ஜோசியரோ, கைரேகை பார்ப்பவரோ, கிளி ஜோசியம் பார்ப்பவரோ இல்லை. ஆனாலும் அவர் அங்கு, விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஒரு நான்கடி உயர மடக்கு மேஜையின் மீது இருக்கும் மர்மமான ஒரு கறுப்புப் பெட்டி மேல் வைக்கப்பட்டிருக்கும் சிறிய ஓரடி நீள ரோபாவுக்கருகே நின்று கொண்டிருக்கிறார். “இதற்கு பெயர் ஜோதிஷ் கம்ப்யூட்டர் லைவ் ஸ்டோரி,” என்கிறார் அவர் செய்தியாளருக்கு ரோபாட்டை அறிமுகப்படுத்தியபடி.
அந்த இயந்திரம் மனிதர்களின் அதிர்வுகளை ஆராயும் என அவர் குறிப்பிட்டு அந்த இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் ஹெட்ஃபோன்களை அவரிடம் சென்று ஆவலுடன் நிற்கும் வாடிக்கையாளரிடம் கொடுக்கிறார். சற்று நேரம் கழித்து, ஒரு பெண்ணின் குரல் இந்தியில் பேசுகிறது. எதிர்காலம் கொண்டிருக்கும் ரகசியங்களை சொல்கிறது. இவை யாவும் வெறும் 30 ரூபாய்க்குக் கிடைக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன் பிகாரின் கெந்தா குக்கிராமத்திலிருந்து மும்பைக்கு புலம்பெயர்ந்து வந்த மாமா ராம் சந்தரிடமிருந்து (நகரத்தில் அவரது பெயர் ராஜு) பெற்ற அந்த தொழில்நுட்ப அற்புதத்துக்கு உதய்தான் தற்போதைய ஒரே பராமரிப்பாளர். அவரது மாமா வீடு வரும் ஒவ்வொரு முறையும் நகரத்தின் கதைகளையும் கொண்டு வருவார். “எதிர்காலத்தை சொல்லும் ஒரு அதிசயப் பொருள் இருப்பதாக மாமா எங்களிடம் சொன்னார். அதை வைத்துக் கொண்டு வருமானம் ஈட்டப் போவதாகவும் அவர் சொன்னார். பலரும் அதை நகைச்சுவை என எண்ணி சிரித்தனர். நான் பரவசமடைந்தேன்,” என நினைவுகூருகிறார் உதய். 11 வயதிலிருந்து அவருக்கு நகர வாழ்க்கையின் அற்புதங்களையும் இயந்திரத்தையும் ராஜு அறிமுகப்படுத்தினார்.















