கீழ் வானத்தில் இருள் படர்கிறது. பல வண்ண சீரியல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான ‘ஓம் சக்தி’ அம்மன் கட் அவுட் ஒளியில் உயிர் பெறுகிறது. பங்களாமேடு கிராமத்தின் இருளர்கள் வருடாந்திர தீ மிதி திருவிழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
பகல் முழுவதும் எரியவிடப்பட்ட விறகுக் குவியல் பொடிப் பொடியாக உடைந்து கனிந்துகொண்டிருக்கிறது. அந்த நெருப்புக் கரியை மெலிதாக நிரவி விடுகிறார்கள் தன்னார்வலர்கள். பார்ப்பதற்கு ஒளிரும் பூக்களைப் போல் இருக்கிறது அந்தக் காட்சி. இதனால் கவரப்பட்டுதான் தீ மிதித் திருவிழாவை இருளர்கள் பூ மிதி திருவிழா என்கிறார்கள்.
மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடுகிறது. ஓம் சக்தி மீதான தங்கள் நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில் இருளர்கள் தீயில் நடப்பதைப் பார்ப்பதற்கு பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வந்து குவிகிறார்கள். இருளர் அல்லாதோரின் தெய்வமான ஓம் சக்தி வழிபாட்டு மரபு தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது. ஓம் சக்தி என்றால், ஆற்றல், பலம் என்று பொருள்.
இருளர்கள் சமூகம் தமிழ்நாட்டில் பட்டியல் பழங்குடி சமூகமாக பட்டியலிடப்பட்டுள்ளது. பாரம்பரியமாக இவர்கள் கன்னியம்மாவை வணங்குகிறவர்கள். இந்தக் கன்னியம்மா ஏழு கன்னிமார்களில் ஒன்று. கன்னியம்மாவின் குறியீடாக ஒவ்வோர் இருளர் வீட்டிலும் ஒரு மண் கலசமும், வேப்பிலைக் கொத்தும் இருக்கும்.
























