வீட்டில் பிரச்சினை ஏற்பட்ட என் முதல் நினைவு, ஒருநாள் வீட்டுக்கு மதுவருந்து விட்டு அப்பா வந்து, அம்மாவை திட்டத் தொடங்கியதுதான். அம்மாவை அவர் தாக்கி, அம்மாவின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தாரை அவமதித்து அசிங்கமாகப் பேசினார். அவர்களும் அச்சமயத்தில் எங்களுடன்தான் இருந்தனர். அவர் பேசியதைக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோதும், அவர்கள் அவரின் வார்த்தைகளை பொருட்படுத்தவில்லை. இந்த சண்டைகள் தினசரி நிகழ்வுகளாகி விட்டன.
2ம் வகுப்பு நான் படித்துக் கொண்டிருந்தபோது நடந்த இன்னொரு சம்பவமும் நினைவில் ஓரளவுக்கு இருக்கிறது. வழக்கம்போல் அப்பா குடித்து விட்டு வந்திருந்தார். கோபமாக அம்மாவையும் என் சகோதர சகோதரிகளையும் பின் என்னையும் தாக்கினார். அந்த இரவில், தாயுடன் நாங்கள் நடுத்தெருவில் நின்றோம். குளிர்காலத்தில் தாயின் அரவணைப்புக்கு ஏங்கும் சிறு விலங்குகள் போல நாங்கள் நின்று கொண்டிருந்தோம்.
நாங்கள் சென்ற பழங்குடி அரசுப் பள்ளியான GTR நடுநிலைப் பள்ளியில் விடுதியும் உணவு வசதிகளும் இருந்ததால், என் அண்ணனும் அக்காவும் அங்கு வசிக்க முடிவு செய்தனர். அந்த நாட்களில், கண்ணீரும் அழுகைகளும்தான் எங்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. எங்கள் வீட்டில் தொடர்ந்து நாங்கள் வசிக்கத் தொடங்கினோம். அப்பா வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
எப்போதும் நாங்கள் பதற்றத்திலேயே இருந்தோம். அடுத்த சண்டை எப்போது வெடிக்கும் எனத் தெரியாது. ஒருநாள் இரவு, அப்பாவின் மது போதை கோபம், அம்மாவின் சகோதரருடன் சண்டை போடுமளவுக்கு மாறியது. கத்தியை வைத்து என் மாமாவின் கைகளை வெட்ட முயன்றார் அப்பா. அதிர்ஷ்டவசமாக கத்தி கூரின்றி இருந்ததால், பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. குடும்பத்திலிருந்து பிறர் தலையிட்டு அப்பாவை அடித்தனர். அந்தக் குழப்பத்தில், அம்மா வைத்திருந்த என் தங்கை தவறி விழுந்து தலையில் அடிபட்டது. ஒன்றும் செய்ய முடியாமல் நடப்பதையும் ஜீரணிக்க முடியாமல் வெறுமனே அங்கு நான் நின்று கொண்டிருந்தேன்.
அடுத்த நாள், வீட்டின் முன்பக்கத்தில் அப்பா மற்றும் மாமாவின் கருஞ்சிவப்பு ரத்தக்கறை சிதறியிருந்தது. நள்ளிரவில் தள்ளாடியபடி என் அப்பா, என்னையும் சகோதரியையும் தாத்தா வீட்டிலிருந்து இழுத்துச் சென்று, வயலுக்கு நடுவே இருக்கும் அவரது சிறு அறையில் விட்டார். சில மாதங்களுக்கு பிறகு, ஒருவழியாக என் பெற்றோர் பிரிந்தனர்.