மீரட்டின் கேரம் போர்டு தொழிற்சாலையில் ஐந்து தொழிலாளர்கள், 40 கேரம் போர்டுகளை செய்து முடிக்க நாளொன்றுக்கு எட்டு மணி நேரங்கள் என ஐந்து நாட்கள் தொடர்ந்து வேலை பார்க்கின்றனர். இங்குள்ள ஒவ்வொரு நிபுணருக்கும் கேரம் விளையாட்டின் ஸ்ட்ரைக்கரும் காய்களும் பலகைக்குள் வேகமாக செல்வதற்கு தேவையான நுட்பங்கள் தெரியும். நான்கு பேர் விளையாடும் விளையாட்டுக்கு தேவையான ஒவ்வொரு கேரம் போரடையும் செய்ய ஐந்து கலைஞர்கள் தேவைப்படுகிறது. கேரம் விளையாட்டை சாத்தியமாக்கும் அவர்கள் அந்த விளையாட்டை விளையாடியதே இல்லை.
”1981ம் ஆண்டிலிருந்து கேரம் போர்ட்களை நான் செய்து வருகிறேன். ஆனால் ஒரு முறை கூட கேரம் போர்ட் நான் வாங்கியதோ விளையாடியதோ இல்லை. அதற்கெல்லாம் நேரம் எங்கே இருக்கிறது?” எனக் கேட்கிறார் 62 வயது மதன் பால். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது கூட, அவரும் சக தொழிலாளர்களும் மும்முரமாக கருவேல மரக்கட்டையை வெட்டி, 2,400 தண்டாக்களை அடுக்கி வைக்கிறார்கள். ஒவ்வொன்றும் 32 அல்லது 36 அங்குல நீளம் கொண்டிருக்கிறது. தொழிலாளர்கள் அவற்றை சந்து முனையில், கர்கானாவின் வெளிப்புற சுவரில் சாய்த்து வைக்கின்றனர்.
“காலை 8.45 மணிக்கு நான் இங்கு வருவேன். ஒன்பது மணிக்கு வேலை செய்யத் தொடங்குவேன். வீட்டுக்கு மாலை 7-7.30 மணிக்கு செல்வேன்,” என்கிறார் மதன் பால். ‘இங்கு’ என அவர் குறிப்பிடுவது உத்தரப்பிரதேச மீரட் நகரின் சூரஜ் குண்ட் ஸ்போர்ட்ஸ் காலனியில் உள்ள சிறு கேரம் போர்டு தொழிற்சாலையை.
மீரட் மாவட்ட புத்தா கிராமத்திலுள்ள வீட்டிலிருந்து தினசரி காலை ஏழு மணிக்கு கிளம்பி வாரத்தின் ஆறு நாட்களுக்கு, 16 கிலோமீட்டர் சைக்கிளில் பயணித்து வேலையிடத்தை அடைகிறார் மதன்.
மீரட் நகரத்தின் தாராபுரி மற்றும் இஸ்லாமாபாத் பகுதிகளின் அறுவை ஆலைகளிலிருந்து வெட்டப்பட்ட கட்டைகள், இரண்டு குட்டி யானை வண்டிகளில் வந்து இறங்கியிருக்கின்றன.
“கேரம் பலகைகளின் வெளிப்புற சட்டகம் அந்தக் கட்டைகளில் செய்யப்படும். முதலில் நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு அவை வெளியே காய வைக்கப்பட வேண்டும். காற்றும் வெயிலும் முற்றாக ஈரத்தை எடுத்து, அவற்றை நேராக்கி, பூஞ்சை வளர்ச்சியை தடுக்கும்,” என விளக்குகிறார் மதன்.



























