கடும் வெயிலுக்கு பிறகு, குளிர்காலம் மகாராஷ்டிராவின் மராத்வடா பகுதியை வந்தடைந்திருக்கிறது. தாமினி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) இரவுப்பணிக்கு தயாராகிக் கொண்டிருந்தார். “நான் காவல் நிலைய அதிகாரி பணியில் இருந்தேன். வாக்கி டாக்கிகளையும் ஆயுதங்களையும் வழங்குவது என் பொறுப்பு,” என்கிறார் அவர்.
ஒருமுறை காவல் ஆய்வாளர், காவல் நிலைய வளாகத்துக்குள் இருக்கும் தன் அதிகாரப்பூர்வ வீட்டுக்கு வாக்கி டாக்கிக்கான பேட்டரிகளை கொண்டு வரும்படி அவரிடம் சொன்னார். நள்ளிரவு கழிந்திருந்த நேரம். அந்த நேரத்தில் அப்படி வீட்டுக்கு வரச் சொல்லக் கூடாது எனக் கட்டுப்பாடு இருந்தாலும் அதுவே வழக்கமாக இருந்தது. “அதிகாரிகள், வீட்டுக்கு கருவிகளை கொண்டு சென்று விடுவார்கள்… அதிகாரிகளின் உத்தரவுகளை நாங்கள் கேட்டாக வேண்டும்,” என விளக்குகிறார் தாமினி.
எனவே நள்ளிரவு 1.30 மணிக்கு தாமினி, காவல் ஆய்வாளர் வீட்டுக்கு சென்றார்.
ஆய்வாளர், சமூகப் பணியாளர் மற்றும் கராம்சாரி (அதிகாரப்பூர்வமற்ற பணிகளுக்கென காவல் நிலையத்தால் பணியமர்த்தப்பட்டவர்) ஆகிய மூவரும் உள்ளே அமர்ந்திருந்தனர். “நான் அவர்களை பொருட்படுத்தவில்லை. பேட்டரி மாற்றுவதற்காக மேஜையில் இருந்து வாக்கி டாக்கி நோக்கி சென்றேன்,” என நினைவுகூருகிறார் 2017ம் ஆண்டு நேர்ந்த அந்த இரவை சங்கடத்துடன். திடீரென அவரது முதுகுக்கு பின் கதவு தாழிடும் சத்தம் கேட்டது. “அறையை விட்டு வெளியே செல்ல முயன்றேன். என் முழு வலிமையையும் பிரயோகித்தேன். ஆனால் அவர்களில் இரண்டு பேர் என்னுடைய கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டு, படுக்கையில் போட்டனர்… பிறகு ஒவ்வொருவராக என்னை வல்லுறவு செய்தனர்.”
இரவு 2.30 மணிக்கு கண்ணீர் மல்க தாமினி வீட்டை விட்டு வெளியேறி, பைக்கில் ஏறி அவரது வீட்டுக்கு சென்றார். “என் மனம் மரத்துப் போயிருந்தது. என் வேலைக்கான எதிர்காலத்தை பற்றியும் நான் சாதிக்க விரும்பியவற்றை பற்றியும் நான் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது, இப்படி ஏன்?” என்கிறார் அவர்.







