மணிப்பூரின் சுராசந்த்பூரிலுள்ள தன் கிராமமான லங்க்சாவுக்கு திரும்பி செல்வதென்கிற எண்ணமே குமா தீக்கின் முதுகை சில்லிட வைக்கிறது. 64 வயது விவசாயியான அவர், 30 வருடங்களாக லங்க்சாவில்தான் வசித்து வருகிறார். அதுதான் அவரது மண். பரிச்சயமான ஊர். அங்குதான் மகன் டேவிட்டை அவர் வளர்த்தார். பள்ளிக்கு மதிய உணவுகளை கட்டிக் கொடுத்தார். அவர்கள் வேலை பார்த்த நெல் வயல்களும் அங்குதான் இருக்கின்றன. முதல்தடவையாக அவர் தாத்தாவானதும் அங்குதான். லங்க்சாதான் குமாவின் உலகம். அவருக்கு திருப்தியாக இருந்த ஊர் அது.
ஜூலை 2, 2023 வரை.
அந்த நாள் வன்மத்தோடு அவரின் வாழ்நாள் நினைவுகளை அழித்துப் போட்டு, மனதிலிருந்து அகற்ற முடியாத ஒற்றைக் காட்சியை குமாவுக்குள் பதிவு செய்திருக்கிறது. அக்காட்சி அவரை தூங்க விடவில்லை. விழித்திருக்கவும் விடுவதாக இல்லை. லங்க்சா தொடங்கும் இடத்தில் உள்ள மூங்கில் வேலியில் மாட்டப்பட்டிருந்த, அவரது மகனின் வெட்டப்பட்ட தலைதான் அக்காட்சி.
இந்தியாவின் வடகிழக்கு பகுதியும் குமராவின் சொந்த மாநிலமுமான மணிப்பூர், மே 3, 2023-லிருந்து இனமோதலில் சிக்கியிருக்கிறது. மார்ச் மாத பிற்பகுதியில் மணிப்பூரின் உயர்நீதிமன்றம், பெரும்பான்மை மெய்தி சமூகத்துக்கு “பழங்குடி அந்தஸ்தை” வழங்கியது. அதன் மூலம் அவர்கள் அரசு வேலைகளுக்கான இட ஒதுக்கீடு மற்றும் பொருளாதார பலன்களை பெற முடியும். குகி பழங்குடிகள் அதிகம் வசிக்கும் மலைப்பகுதிகளில் அவர்கள் நிலமும் வாங்க முடியும். அந்த முடிவுக்கு, பிற்பாடு உச்சநீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது.
அம்முடிவு ஏற்கனவே மாநிலத்தில் 53 சதவிகிதம் இருக்கும் மெய்தி சமூகத்தினருக்கு அரசில் இன்னும் அதிக அதிகாரத்தை வழங்கும் என மாநில மக்கள்தொகையில் 28 சதவிகிதம் இருக்கும் குகி சமூகத்தினர் நம்புகிறார்கள்.











