“எங்களின் கஷ்டத்தை ஏன் அரசாங்கம் கண்டு கொள்ள மறுக்கிறது?” எனக் கேட்கிறார் அங்கன்வாடி பணியாளர் மங்கள் கார்பே.
“நாடு வலிமையாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்க நாங்கள் நிறைய பங்களிக்கிறோம்,” என்கிறார், தன்னை போன்ற அங்கன்வாடி பணியாளர்கள் தாய்சேய் நலனுக்கான அரசு திட்டங்கள் இயங்க எப்படி காரணமாக இருக்கிறார்கள் என விவவரித்து.
முப்பத்து ஒன்பது வயது மங்கள், மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்ட ரகாதா தாலுகாவிலுள்ள தோர்ஹலே கிராமத்தில் அங்கன்வாடி நடத்தி வருகிறார். அவரைப் போலவே மாநிலம் முழுக்க இரண்டு லட்சம் பெண்கள் அங்கன்வாடி பணியாளர்களாகவும் உதவியாளர்களாகவும் பணியாற்றுகின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகத்துக்கு கீழ் வரும் சுகாதாரம், ஆரோக்கியம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகளின் முதல் கட்ட முன்னெடுப்புகள் ஆகியவற்றை அவர்கள் அமல்படுத்துகிறார்கள்.
அவர்களை நோக்கி அரசு காட்டும் அலட்சியத்தை எதிர்த்து, மகாராஷ்டிரா முழுக்க நூற்றுக்கணக்கானோர் பங்கெடுக்கும் காலவரையற்ற போராட்டம் டிசம்பர் 5, 2023-லிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
”முன்பும் கூட பலமுறை நாங்கள் போராடியிருக்கிறோம்,” என்கிறார் மங்கள். “அரசாங்க பணியாளர்களாக நாங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். மாத ஊதியமாக 26,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும். ஓய்வூதியம் மற்றும் பயணத்துக்கும் எரிபொருளுக்குமான பணமும் வழங்கப்பட வேண்டும்,” என போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளை அவர் பட்டியலிடுகிறார்.












