ஒரு வழக்கமான பஷ்மினா சால்வைக்கான நூல் சுற்ற ஃபஹ்மீதா பானோவுக்கு ஒரு மாத காலம் பிடிக்கிறது. சங்தாங்கி ஆட்டின் மிக மெல்லிய கம்பளி நூலை பிரித்து சுற்றுவது என்பது மிகவும் கடினமான நுட்பமான வேலை. ஒரு மாத உழைப்புக்கு, 1,000 ரூபாய் வரை சம்பாதிப்பதாக 50 வயது கைவினைஞர் சொல்கிறார். “நான் தொடர்ந்து வேலை செய்தால், நாளொன்றுக்கு 60 ரூபாய் சம்பாதிக்க முடியும்,” என்கிறார் அவர்.
ரூ.8000 முதல் ரூ. 1,00,000 வரை வேலைப்பாடை பொறுத்து சால்வையின் விலை மாறுகிறது. அந்த விலையோடு அவர்களின் வருமானத்தை ஒப்பிட்டால், ஒரு பொருட்டுக்குக் கூட ஈடில்லை.
பாரம்பரியமாக வீட்டு வேலைகளுக்கு நடுவே பெண்கள் பஷ்மினா நூலை சுற்றுகின்றனர். இந்த வேலையை செய்யும் ஃபஹ்மீதா போன்றவர்களுக்குக் கொடுக்கப்படும் குறைவான ஊதியத்தால், அந்த பணியை செய்பவர்களின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
ஸ்ரீநகரில் வசிக்கும் ஃபிர்தவுசா, திருமணமாகி பின் குடும்பத்தையும் வீட்டையும் கவனிப்பதில் மும்முரமாவதற்கு முன்பு, கம்பளி நூல் சுற்றிக் கொண்டிருந்தார். இளமைக்காலத்தில் நினைவுகூரும் அவர், “வீட்டில் மூத்தவர்கள் எங்களை நூல் சுற்ற சொல்வார்கள். அப்போதுதான் மனம் அலைபாயாது என்றும் கிசுகிசுக்கள் பேச மாட்டோம் என்றும் சொல்வார்கள்,” என்கிறார். அவரின் இரண்டு பதின்வயது மகள்கள் நூல் சுற்றும் வேலை செய்யவில்லை. வீட்டுவேலையிலும் படிப்பிலும் அவர்கள் மும்முரமாக இருக்கிறார்கள். அதைக் காட்டிலும் வருமானமும் குறைவு.
நூல் சுற்றுதல் காஷ்மீரின் பண்பாடு என்னும் ஃபிர்தவுசா, உள்ளூர் உணவுக்கும் (தாமரைத் தண்டு) நூல் சுற்றலுக்கும் உள்ள தொடர்பை சொல்கிறார்: “தொடக்கத்தில் தாமரைத் தண்டு போல் மெலிதாக இருக்கும் நூலை சுற்ற பெண்கள் போட்டி போடுவார்கள்.”










