கோமல் ரயில் பிடிக்க சென்று கொண்டிருந்தார். அசாமில் அவரது வீடு இருக்கும் ரங்கியா ஜங்ஷனுக்கு செல்லவிருக்கிறார்.
அது அவர் போகக் கூடாது என முடிவெடுத்திருந்த இடம். மனநலம் பாதிக்கப்பட்ட தாயை கூட பார்க்க அவர் செல்ல விரும்பவில்லை.
பாலியல் ரீதியாக அவருக்கு வன்கொடுமை இழைக்கப்பட்ட வீட்டுக்கு செல்வதற்கு பதிலாக டெல்லியில் தங்கி GB ரோட்டிலுள்ள விபச்சார விடுதிகளில் வேலை பார்ப்பது மேலானது. அவர் திரும்பிச் சென்று கொண்டிருக்கும் குடும்பத்தை சேர்ந்த 17 வயது ஒன்று விட்ட சகோதரன், அவருக்கு 10 வயதாக இருக்கும்போது பலமுறை வல்லுறவு செய்திருப்பதாக சொல்கிறார். “அவனது முகத்தை பார்க்க நான் விரும்பவில்லை. அவனை நான் வெறுக்கிறேன்,” என்கிறார் கோமல். அவரை அவன் அடிப்பான். தடுத்தால் தாயைக் கொன்று விடுவதாக மிரட்டுவான். ஒருமுறை கூரான பொருள் ஒன்றினால் அவன் தாக்க, அவரின் நெற்றி இன்னும் அந்த காயத்தின் தழும்பை தாங்கியிருக்கிறது.
“இதனால்தான் நான் வீட்டுக்கு செல்ல விரும்பவில்லை. அவர்களிடம் நான் பலமுறை சொல்லி விட்டேன்,” என்கிறார் கோமல் காவலர்களிடம் நடந்த உரையாடலை குறித்து. இதற்குப் பிறகும் காவலர்கள் அவரை, எந்த ஏற்பாடும் இன்றி, கைவசம் ஒரு சிம் கார்டு கூட இன்றி, அசாமுக்கான 35 மணி நேரப் பயணத்துக்கு அனுப்பி வைக்கின்றனர். பாதுகாப்பாக அவர் சென்றாரா அல்லது வீட்டில் வன்முறை நேர்ந்ததா என தெரிவிக்கக் கூட வாய்ப்பில்லை.
கடத்தி செல்லப்படும் இளையோருக்கும் சிறுவர் சிறுமியருக்குமான தேவைகளை பூர்த்தி செய்வதற்கான சேவைகள் தேவை என்கிறார் கோமல்.





