“கூதலு! கூதலு! பாத்ரே கூதலு (முடி! முடி! முடிக்கு பாத்திரம்!)”
சரஸ்வதியின் உச்சஸ்தாயியி குரல், முடி சேகரிக்க அவர் வீடு வீடாக செல்லும் பெங்களூருவின் மதிகரேவின் தெருக்களை நிறைக்கிறது. முடிக்கு பதிலாக அவர், அலுமினியத்தாலான எடை குறைவான, நீர் கிண்ணங்கள், பானைகள், கடாய்கள், சமையல் கரண்டிகள், பெரிய சல்லடைகள் போன்றவற்றை தருகிறார்.
“இத்தொழிலை என் அண்ணி ஷிவம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டேன். நிறைய வாடிக்கையாளர்களுக்கு கேட்கும் வகையில் குரல் கொடுத்து கத்தவும் அவர் எனக்கு சொல்லிக் கொடுத்தார்,” என்கிறார் பெங்களூரை சேர்ந்த 23 வயது வியாபாரி.
இந்த வேலையை செய்யும் மூன்றாம் தலைமுறையான சரஸ்வதி சொல்கையில், “என் தாய் கங்கம்மா, இந்த வேலையை திருமணத்துக்கு முன் செய்து கொண்டிருந்தார். முதுகு வலியும் முழங்கால் பிரச்சினைகளும் இருந்ததால் அவர் இந்த வேலையை குறைத்துக் கொண்டார்.” அவரின் தந்தை புல்லணா மற்றும் தாய் கங்கம்மா ஆகியோர் 30 வருடங்களுக்கு முன் ஆந்திராவிலிருந்து இங்கு இடம்பெயர்ந்து வந்தவர்கள்.
ஆந்திராவின் பிற்படுத்தப்பட்ட சமூகமான கொராச்சா சமூகத்தை சேர்ந்தவர்கள் அவர்கள். தற்போது 80 வயதாகும் புல்லணா, காய்ந்த பனை இலைகள் கொண்டு துடைப்பம் செய்து, ஒவ்வொன்றையும் 20-50 ரூபாய் விலையில் விற்கிறார்.










