மாற்றியமைக்கப்பட்ட மகிந்திரா வாகனம் - MH34AB6880 - கிராமத்தில் பரபரப்பாக இருக்கும் சதுக்கத்தில் சென்று நிற்கிறது. அப்பகுதி, 2920 MW அனல் மின் நிலையத்தின் கழிவுகள் சேர்ந்து சாம்பல் குன்றுகள் இருக்கும் பகுதிக்கும் சந்திரப்பூரின் புறநகரின் அடர்ந்த புதர்க்காடுகளுக்கும் இடையில் இருக்கிறது.
வாகனத்தின் இரு பக்கங்களிலும் முழக்கங்களும் புகைப்படங்களும் கொண்ட வண்ணங்கள் நிறைந்த போஸ்டர்கள் இருக்கின்றன. அக்டோபர் 2023ன் ஒரு ஞாயிறு காலையில் அந்த வாகனம் மக்களின் கவனத்தை ஈர்க்கிறது. குழந்தைகளும் ஆண்களும் பெண்களும் யார் வந்திருக்கிறாரென பார்க்க விரைகின்றனர்.
வித்தால் பத்கால் வாகனத்தை விட்டு வெளியே வருகிறார். ஓட்டுநரும் உதவியாளரும் அவரது பக்கத்தில் நிற்கின்றனர். எழுபது வயதுகளில் இருக்கும் அவர், வலது கையில் மைக்கை எடுத்து இடது கையில் ஒரு டைரியை எடுக்கிறார். வெள்ளை வேட்டி, குர்தா, நேரு குல்லாய் அணிந்திருக்கும் அவர், மைக்கில் பேசத் தொடங்குகிறார். வாகனத்தின் முன்பக்க கதவில் வைக்கப்பட்டிருக்கும் ஸ்பீக்கர், அவரின் பேச்சை சத்தமாக ஒலிபரப்புகிறது.
அங்கு வந்திருக்கும் காரணத்தை அவர் விளக்குகிறார். 5,000 பேர் கொண்ட அந்த கிராமத்தின் மூலை முடுக்குகளில் அவரின் பேச்சு சென்று சேர்கிறது. அந்த கிராமத்தில் வசிப்போரின் பெரும்பான்மை விவசாயிகள். பிறர், அருகாமை நிலக்கரி ஆலைகளிலும் சிறு ஆலைகளிலும் தினக்கூலி வேலை செய்கின்றனர். ஐந்து நிமிடங்கள் நீடிக்கும் பேச்சு முடியும்போது, இரண்டு மூத்த கிராமவாசிகள் அவரை புன்னகையோடு வரவேற்கின்றனர். “வணக்கம் மாமா… வந்து உட்காருங்க,” என சொல்கிறார் 65 வயது விவசாயியான மகாதேவ் திவாசே. 65 வயது விவசாயியான அவர், கிராமத்தின் மையத்தில் ஒரு சிறு மளிகை கடை நடத்துகிறார்.
“வணக்கம்,” என பதிலளிக்கிறார் பத்கால் கைகளை கட்டிக் கொண்டு.


















