அசோக் ஜாதவ், அவ்வாறு இறந்த மனிதர்களில் ஒருவர்.
45 வயதான அவர் மற்றவர்களைப் போலவே தினமும் காலையில் எழுகிறார். மற்ற கூலித்தொழிலாளர்களைப் போல அவர் வேலைக்குச் சென்று, மற்றவர்களின் பண்ணைகளில் கடினமாக உழைக்கிறார். மற்ற தொழிலாளர்களைப் போல ஒரு நாள் வேலை முடிந்து மாலையில் வீடு திரும்புவார். அவருக்கும் மற்றவர்களுக்குமான ஒரே ஒரு வித்தியாசம்: அதிகாரப்பூர்வமாக, அசோக் இறந்துவிட்டார்.
ஜூலை, 2023 இல், கோர்கரில் வசிக்கும் அசோக், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் கீழ் தனக்கு கிடைக்கும் ரூ.6,000 தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிடைக்கவில்லை என்பதை உணர்ந்தார். 2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட, இந்த திட்டத்தின்படி, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமான ஆதரவாக, ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது.
முதல் இரண்டு ஆண்டுகளுக்கு, பணம் தவறாமல் கிடைத்தது. பின்னர் திடீரென நின்று விட்டது. இது வெறும் கணிணிப்பிழை என்றும், சிஸ்டம் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் என்றும் நினைத்தார். அசோக் சொன்னது சரிதான். அது ஒரு கணிணிப்பிழை தான். ஆனால் அவர் நினைத்த மாதிரி இல்லை.
வழங்கப்பட்ட பணம் ஏன் நிறுத்தப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றபோது, கணிணியில் தரவுகளைப் பார்த்தவர், 2021-ல் கோவிட்-19-ன் போது அவர் இறந்துவிட்டதாக சாதாரணமாக தெரிவித்தார். சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் அசோகா கூறுகிறார், “முஜே சமஜ் நஹி ஆயா இஸ்பே க்யா போலு [என்ன சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை].”







