”திக்ரி எல்லையில் சாலையின் இரு பக்கங்களிலும் 50 கிலோமீட்டர்கள் தொலைவுக்கு ட்ராக்டர்கள் நிற்கின்றன,” என்கிறார் கமல் ப்ரார். அவரும் 20 விவசாயிகளும் ஹரியானாவின் ஃபதெஹாபாத் மாவட்டத்திலிருந்து ஐந்து ட்ராக்டர்களிலும் இரண்டு ட்ராலிகளிலும் ஜனவரி 24 அன்று திக்ரியை அடைந்தனர்.
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி 2020, நவம்பர் 26லிருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராடும் தலைநகர எல்லையின் மூன்று முக்கிய தளங்களில் ஒன்று திக்ரி.
போராட்டங்களின் ஒரு பகுதியாக முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரிய அளவிலான ட்ராக்டர் ஊர்வலத்தை குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி நடத்த விவசாயிகள் திட்டமிட்டிருக்கின்றனர்.
ஊர்வலத்தில் நிர்மல் சிங்கும் கலந்து கொள்கிறார். பஞ்சாபின் வஹாப்வாலா கிராமத்திலிருந்து கொண்டு வந்த நான்கு ட்ராக்டர்களை நிறுத்துமிடம் கண்டுபிடிக்கவே பல மணி நேரங்கள் அவருக்கு ஆகியிருக்கிறது. கிசான் மஜ்தூர் ஏக்தா யூனியன் என்ற பதாகையின் கீழ் அவருடன் 25 பேர் வஹாப்வாலாவிலிருந்து வந்திருக்கிறார்கள். “நிறைய மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர். ட்ராக்டர்களின் எண்ணிக்கை பெருகுவதை பார்ப்பீர்கள்,” என்கிறார்.








