ஜூலை மாதத்தின் ஒருநாளில் தம்தாரி டவுனிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கொலியாரி-கரெங்கா கிராமத்து சாலையில் இன்னொரு விவசாயத் தொழிலாளர் குழுவை நாங்கள் சந்தித்தோம். “நாங்கள் வேலை பார்க்கவில்லை என்றால் இறந்துவிடுவோம். கொரொனாவை சொல்லி வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லை,” என்கிறார் தம்தார் ஒன்றியத்தின் கரெங்கா கிராமத்தை சேர்ந்த புக்ஷின் சாகு. அக்குழுவுக்கு அவர்தான் தலைவர் மற்றும் ஒப்பந்தக்காரர். வயது 24. ”நாங்கள் தொழிலாளர்கள். எங்களுக்கு கைகால்களும் மட்டுமே மூலதனம். வேலை பார்க்கும்போது நாங்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறோம்….”
அவரும் மற்றவர்களும் சாலையின் இருபக்கங்களிலும் அமர்ந்து, வீட்டிலிருந்து கொண்டு வந்த மதிய உணவான அரிசி, பருப்பு, கூட்டு ஆகியவற்றை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அதிகாலை 4 மணிக்கு எழுந்துவிட்டனர். சமைத்து, வீட்டுவேலைகள் முடித்து, காலை உணவை சாப்பிட்டுவிட்டு அதிகாலை 6 மணிக்கு நிலத்தை அடைவார்கள். 12 மணி நேரங்கள் கழித்து மாலை 6 மணிக்கு வீடு திரும்புவார்கள். பிறகு மீண்டும் சமைத்து மற்ற வேலைகளை செய்ய வேண்டும் என பிற பெண்களின் அன்றாட வேலைகளையும் சேர்ந்து சொல்கிறார் புக்கின்.
”ஒவ்வொரு நாளும் இரண்டு ஏக்கர்களுக்கு விதைக்கிறோம். ஒரு ஏக்கருக்கு 3500 ரூபாய் பெறுகிறோம்,” என்கிறார் புக்கின். ஒரு ஏக்கர் விதைப்புக்கான கூலி 3500 ரூபாயிலிருந்து 4000 ரூபாய் வரை இருக்கும். குழுவில் இருக்கும் எண்ணிக்கை மற்றும் அவர்கள் நடத்தும் பேரத்தை பொறுத்து மாறும்.
புக்கினின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் போபாலில் தொழிலாளராக பணிபுரிய சென்றவர் பின்னர் திரும்பவே இல்லை. “எங்களை இந்த கிராமத்தில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். எங்களோடு தொடர்பில் கூட இல்லை,” என்கிறார் அவர். மகன் கல்லூரியில் படிக்கிறார். புக்கினின் வருமானம் மட்டும்தான் இரண்டு பேருக்கும் ஆதாரம்.
அதே சாலையில் நாங்கள் இன்னொரு தொழிலாளர் குழுவை சந்தித்தோம். பல பெண்களும் சில ஆண்களும் கொண்ட குழு. விதைப்புக்கான விதை நெல் எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். “எங்கள் வாழ்க்கைக்கான ஆதாரம் இதுதான். ஆகவே நாங்கள் வேலை பார்த்தாக வேண்டும். நாங்கள் வேலை செய்யவில்லை எனில் யார் அறுவடை செய்வது? எல்லாருக்கும் சாப்பிட உணவு வேண்டும்,” என்கிறார் டர்ரி கிராமத்தின் ஒப்பந்தக்காரரான சபிதா சாகு. “கொரோனாவுக்கு நாங்கள் அஞ்சினால், எங்களால் வேலை பார்க்க முடியாது. எங்கள் குழந்தைகளுக்கு யார் சாப்பாடு போடுவார்? நிலங்களில் நாங்கள் சமூக இடைவெளியைத்தான் கடைப்பிடிக்கிறோம்.” ஜூலை மாதத்தின் மத்தியில் அவர்களை நான் சந்தித்தபோது, சபிதாவும் 30 பேர் கொண்ட அவரின் குழுவும் 25 ஏக்கர்களில் விதைப்பை முடித்திருந்தனர். ஒரு ஏக்கர் விதைப்புக்கு கூலி 3600 ரூபாய்.