ஷாந்தி மஞ்சி முதன்முறையாக இந்த வருட ஜனவரி மாதம் பாட்டியானபோது அவருக்கு வயது 36. இருபது வருடங்களில் ஏழு குழந்தைகளை எந்த உதவியுமின்றி வீட்டிலேயே பெற்றெடுத்த அந்த பெண் இறுதியாக மருத்துவமனைக்கு சென்றார்.
“பல மணி நேரங்களாக என் மகள் வலியுடன் போராடினாள். குழந்தை வெளியே வரவில்லை. நாங்கள் ஒரு டெம்போவை வரவழைத்தோம்,” என அவரின் மூத்த மகளுக்கு பிரசவ வலி வந்த சமயத்தை நினைவுகூர்கிறார். அவர் குறிப்பிட்ட டெம்போ என்பது மூன்று சக்கர பயணியர் வாகனம் ஆகும். நான்கு கிலோமீட்டர் தொலைவிலிருந்து ஷியோகர் டவுனுக்கு வாகனம் வந்தடைய ஒரு மணி நேரம் ஆனது. மாவட்ட மருத்துவமனைக்கு மம்தா அவசரமாக கொண்டு செல்லப்பட்டு, பல மணி நேரங்களுக்கு பிறகு ஓர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
“அவன் 800 ரூபாய் வாங்கிவிட்டான்,” என டெம்போவுக்கான வாடகையை கோபத்துடன் முணுமுணுக்கிறார் ஷாந்தி. “இங்கிருக்கும் எவரும் மருத்துவமனை சென்றதில்லை. எனவே அவசர ஊர்தியை பற்றி எங்களுக்கு தெரியாது.”
அன்றைய இரவு, அவரின் குழந்தையான நான்கு வயது காஜல் இரவுணவு சாப்பிடுவதற்காக ஷாந்தி வீடு திரும்ப வேண்டியிருந்தது. “நான் பாட்டியாகி விட்டேன்,” என்னும் அவர், “எனினும் ஒரு தாயின் பொறுப்புகளும் எனக்கு உண்டு,” எனக் கூறுகிறார். மம்தா, காஜலை தாண்டி அவருக்கு மூன்று மகள்களும் இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.
மஞ்சியின் குடும்பம், ஷியோகர் மாவட்டத்தில் இருக்கும் மதோப்பூர் அனந்த் கிராமத்துக்கு வெளியே ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குடிசைப்பகுதியான முசாகர் தொலாவில் வசிக்கிறது. மண்ணாலும் மூங்கிலாலும் கட்டப்பட்ட 40 குடிசைகளில் கிட்டத்தட்ட 300-400 பேர் வசிக்கின்றனர். அவர்கள் அனைவரும் முசாகர் சாதியை சேர்ந்தவர்கள். பிகாரின் மிகவும் பின்தங்கிய மகாதலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். உள்ளே, தடுக்கப்பட்ட ஒரு மூலையில் சில ஆடுகளோ மாடோ கட்டப்பட்டிருக்கும்.










