பிரகாஷ் பாகத், குனிந்து ஒரு பெரிய அலுமினிய பாத்திரத்தில் உள்ள உருளைக்கிழங்கு, பட்டாணி மசாலாவை பெரிய கரண்டியை வைத்து கிளறுகிறார். அவர் தனது இடது காலில் உடலின் எடையை தாங்கிக்கொள்கிறார். வலது காலை காற்றில் தொங்கவிட்டு ஒரு மர குச்சியின் ஆதரவுடன் நிற்கிறார்.
“எனது பத்து வயதில் இருந்து நான் குச்சியுடன் நடந்து கொண்டிருக்கிறேன் என்றுதான் நினைக்கிறேன். குழந்தையாக இருந்தபோதிலிருந்தே எனது காலை பிடித்துக்கொண்டு நடக்க பழகிவிட்டேன். நான் நரம்பை இழுத்துவிட்டதால், இவ்வாறு ஏற்பட்டது என்று எனது பெற்றோர்கள் கூறினர்“ என்று 52 வயதான பிரகாஷ் பாகத் கூறுகிறார்.
ஆனால் அது அவரது கொள்கை உறுதியை குலைக்கவில்லை. மஹாராஷ்ட்ரா மாநிலம் ராஜ்காட் மாவட்டம் பன்வெல் தாலுகாவில் உள்ள பார்கான் கிராமத்தில் உள்ள பலர் டெல்லி நோக்கி வாகன பேரணி செல்ல முடிவெடுத்தபோது, பேரணியில் தானும் கலந்தகொள்வது குறித்து அவர் யோசிக்கவேயில்லை. உடனே கலந்துகொள்ள முடிவெடுத்துவிட்டார். “நான் இங்கு ஒரு காரணத்திற்காக வந்திருக்கிறேன்“ என்று தயாராகிவிட்ட மசாலாவை சுவைத்துக்கொண்டே கூறுகிறார்.
2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசு அறிவித்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, தேசத்தின் தலைநகரான டெல்லியின் எல்லையில் 3 வெவ்வேறு இடங்களில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, டிசம்பர் 21ம் தேதி மஹாராஷ்ட்டிராவில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நாசிக்கில் ஒன்றுகூடி, 1,400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
பார்கான் கிராமத்தில் இருந்து 39 பேர் கலந்துகொள்ள முடிவெடுத்தனர். “இந்நாட்டின் விவசாயிகள் ஏமாற்றப்படுகிறார்கள்“ என்று பாகத் கூறுகிறார். “அவர்களின் விளைச்சலுக்கு சரியான விலை கிடைக்க வேண்டும். இந்த வேளாண் திருத்த சட்டங்கள் அவர்களை மேலும் கடனில் ஆழ்த்தும். பெரு நிறுவனங்களின் பிடியில் விவசாயிகள் சிக்கிக்கொள்வார்கள். அவர்களை பின்னாளில் அந்நிறுவனங்கள் அழிக்கும். இந்த வேளாண் திருத்த சட்டங்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச்சேர்ந்த விவசாயிகளை முதலில் பாதிக்கும். எனவேதான் அவர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதனால், நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளை அது தண்டிக்காது என்பது கிடையாது“ என்று அவர் மேலும் கூறுகிறார்.






