தீபா மருத்துவமனையிலிருந்து கிளம்பியபோது காப்பர் டி கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டிருப்பதை அறிந்திருக்கவில்லை.
சமீபத்தில்தான் அவர் இரண்டாவது குழந்தை பெற்றிருந்தார். ஆண் குழந்தை. குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்ள விரும்பினார். ஆனால் சிசேரியன் அறுவை சிகிச்சையில்தான் பிரசவம் நடந்திருந்தது. “ஒரே நேரத்தில் இரண்டு அறுவை சிகிச்சைகளை செய்ய முடியாதென மருத்துவர் கூறினார்,” என்கிறார் தீபா.
மருத்துவர் காப்பர் டி பரிந்துரைத்தார். தீபாவும் அவரின் கணவர் நவீனும் (உண்மையான பெயர்கள் இல்லை) அது வெறும் யோசனை என மட்டுமே நினைத்தனர்.
மே 2018-ல் நடந்த பிரசவத்துக்கு பிறகு நான்கு நாட்கள் கழித்து தில்லியின் அரசு மருத்துவமனையிலிருந்து கிளம்பினார் 21 வயது தீபா. “மருத்துவர் காப்பர் டி பொருத்தியது எங்கள் இருவருக்கும் தெரியாது,” என்கிறார் நவீன்.
ஒரு வாரம் கழித்து, சமூக சுகாதார ஊழியர் ஒருவர் தீபாவின் மருத்துவமனை அறிக்கையை படித்தபோதுதான் உண்மை தெரிய வந்தது. தீபாவும் நவீனும் அதுவரை அந்த அறிக்கையை படித்திருக்கவில்லை.
காப்பர் டி சாதனம், கர்ப்பம் தரிப்பதை தடுப்பதற்கென கருப்பைக்குள் பொருத்தப்படும் சாதனம் ஆகும். “சரியாக பொருந்த மூன்று மாதங்கள் ஆகலாம். சிலருக்கு அசவுகரியும் கொடுக்கவும் கூடும். இதனால்தான் நாங்கள் தொடர் பரிசோதனைகளுக்கு (ஆறு மாதங்களுக்கு) நோயாளிகளை வரச் சொல்கிறோம்,” என்கிறார் 36 வயது சமூக சுகாதார ஊழியரான சுஷிலா தேவி. தீபா வசிக்கும் பகுதியில் 2013ம் ஆண்டிலிருந்து அவர் பணிபுரிந்து வருகிறார்.
ஆனால் முதல் மூன்று மாதங்களுக்கு எந்தவித அசவுகரியத்தையும் தீபா உணரவில்லை. நோயுற்றிருந்த மூத்த மகனை கவனித்துக் கொண்டதால் மருத்துவ பரிசோதனைகளுக்கும் அவர் செல்லவில்லை. கருத்தடை சாதனத்தை தொடர்ந்து பயன்படுத்துவதென முடிவெடுத்துக் கொண்டார்.










