தவறு நடக்க வாய்ப்பே இல்லை.
வாடிக்கையாளரின் காதில் இருக்கும் மெல்லிய ஊசியைக் கொண்ட தன் கைகளில் அமனின் பார்வை நிலை பெற்றிருக்கிறது. ஊசி முனையின் கூர்மையை தவிர்ப்பதற்காக பஞ்சு உருட்டி வைக்கப்பட்டிருக்கிறது. தோலையோ செவிப்பறையையோ உரசி விடக் கூடாது என மிகவும் எச்சரிக்கையுடன் மெதுவாக வேலை செய்கிறார். “காதிலுள்ள மெழுகுதான் அகற்றப்பட வேண்டும்,” என நினைவுறுத்துகிறார்.
ஓர் அரசமரத்தடி நிழலில் அமர்ந்து அவர் பாரியுடன் பேசிக் கொண்டிருக்கிறார். ஊசி போன்ற கருவி, இடுக்கி, பஞ்சு ஆகியவை கொண்ட ஒரு கறுப்பு பை அவருக்கு அருகே இருக்கிறது. பையில் மூலிகைகளால செய்யப்பட்ட எண்ணெய் குடுவை ஒன்றும் இருக்கிறது. காதை சுத்தப்படுத்துவதற்காக அவரது குடும்பத்துக்கு மட்டுமே தெரிந்த பிரத்யேகக் கலவையுடன் தயாரிக்கப்படும் எண்ணெய் அது என அவர் குறிப்பிடுகிறார்.
“ஊசி போன்ற கருவி காது மெழுகை சுத்தப்படுத்தும். இடுக்கிகள் அவற்றை வெளியே எடுக்க பயன்படும்.” காதில் சதை வளர்ந்திருந்தால் மட்டும்தான் மூலிகை எண்ணெய் பயன்படுத்தப்படும். “தொற்றுகளை நாங்கள் பார்ப்பதில்லை. காது மெழுகும் அரிப்பும் மட்டும்தான் நாங்கள் சரி செய்வோம்.” முரடாக கையாளப்பட்டால் அரிப்பு தொற்றாக மாறி காதை காயப்படுத்தவும் செய்யும் என்கிறார் அவர்.










