“எங்கள் வாழ்க்கை ஒரு சூதாட்டம். கடந்த இரண்டு வருடங்களை நாங்கள் எப்படி சமாளித்தோம் என்பது அந்த கடவுளுக்குதான் தெரியும்,” என்கிறார் வி.தர்மா. “எனது 47 வருட கலை வாழ்க்கையில், கடந்த இரண்டு வருடங்களில்தான் சாப்பிடக் கூட வழியின்றி தவித்தோம்.”
60 வயது தர்மா அம்மா ஒரு திருநங்கை நாட்டுப்புறக் கலைஞர். தமிழ்நாட்டின் மதுரையில் வாழ்கிறார். “எங்களுக்கென நிலையான ஊதியம் இல்லை,” என்கிறார் அவர். “இந்த கொரோனாவால் எங்கள் வருமானத்துக்கு இருந்த கொஞ்ச வாய்ப்புகளையும் இழந்துவிட்டோம்.”
மதுரை மாவட்டத்தின் திருநங்கை நாட்டுப்புற கலைஞர்களுக்கு வருடத்தின் முதல் ஆறு வருடங்கள் மிகவும் முக்கியம். இந்த காலக்கட்டத்தில்தான், கிராமங்கள் விழாக்களையும் கோவில்கள் கலாசார நிகழ்வுகளையும் நடத்துகின்றன. ஊரடங்கு காலத்தால் பொது நிகழ்வுகளுக்கு போடப்பட்ட தடை, திருநங்கை கலைஞர்களை பெரிதும் பாதித்திருக்கிறது. கிட்டத்தட்ட 500 திருநங்கை கலைஞர்கள் இருப்பதாக சொல்கிறார் 60 வயது தர்மா அம்மா. நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைகளில் இருக்கும் திருநங்கைகளுக்கான மாநில அமைப்பின் செயலாளராக இருக்கிறார் அவர்.
தர்மா அம்மா மதுரை ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு அறையில் வாடகைக்கு இருக்கிறார். அங்கு அவரது உறவினரும் உறவினரின் இரு குழந்தைகளும் உடன் வசிக்கின்றனர். உறவினர் பூ வியாபாரியாக இருக்கிறார். தினக்கூலி பெற்றோருக்கு பிறந்த தர்மா அம்மா மதுரையில் வளர்ந்தபோது கோவில்களிலும் விழாக்களிலும் நடனமாடும் திருநங்கை கலைஞர்களை பார்த்து வளர்ந்திருக்கிறார்.












