ராணியின் முடியை பூனம் இரண்டாகப் பிரித்து எண்ணெய் தேய்த்து இறுக்கிப் பின்னுகிறார். ஜடைக்கு முடி போடுவதற்கு முன் அக்குழந்தை உடன்பிறந்தோர் மற்றும் நண்பர்களுடன் விளையாட வெளியே ஓடுகிறார். “நண்பர்கள் வந்துவிட்டால் போதும். எல்லாரும் வெளியே ஓடி விளையாடத் தொடங்கி விடுவார்கள்,” என்கிறார் பூனம் தேவி அவரின் குழந்தைகளைப் பற்றி. ராணிக்கு வயது எட்டு. பூனமின் இரண்டாம் மகள் ராணி.
பூனத்துக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உண்டு. கடைக்குட்டியான மகனுக்கு மட்டும்தான் பிறப்புச் சான்றிதழ் இருக்கிறது. “என்னிடம் பணம் இருந்திருந்தால், பிற மூன்று குழந்தைகளுக்கும் கூட பெற்றிருப்பேன்,” என்கிறார் அவர்.
அவரின் காரவீட்டைச் சுற்றி மூங்கில் குச்சிகளால் வேலி அடைக்கப்பட்டிருக்கிறது. 38 வயது தினக்கூலி தொழிலாளரான மனோஜ்ஜை மணந்து எக்தாரா கிராமத்தில் அவர் வசித்து வருகிறார். மனோஜ் மாத வருமானமாக 6000 ரூபாய் ஈட்டுகிறார்.
“எனக்கு 25 வயது ஆகிறது,” என்கிறார் பூனம் (இக்கட்டுரையில் எல்லா பெயர்களும் மாற்றப்பட்டிருக்கின்றன). “என்னுடைய ஆதார் அட்டை என் கணவரிடம் இருக்கிறது. அவர் இப்போது வீட்டில் இல்லை. திருமணமானபோது எனக்கு என்ன வயதென நினைவில் இல்லை.” அவருக்கு தற்போது 25 வயது எனில் திருமணம் நடந்தபோது அநேகமாக அவருக்கு 14 வயதாக இருந்திருக்கும்.
பூனத்தின் எல்லாக் குழந்தைகளும் வீட்டுப் பிரசவத்தில்தான் பிறந்தன. “மருத்துவச்சி ஒவ்வொரு முறையும் உதவினார். பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டால் மட்டும்தான் மருத்துவமனைக்கு செல்ல முயலுவோம்,” என்கிறார் மனோஜின் உறவினரான 57 வயது சாந்தி தேவி. அவர்களது வீட்டுக்கு அருகே அவர் வசிக்கிறார். பூனமை தன் சொந்த மருமகளாய் கருதுகிறார்.







